Thursday, March 8, 2012

ஒரு பெண்ணைக் கொலை செய்தோம்!

சுகுணா திவாகர்
ஓவியங்கள் : இளையராஜா, சிவபாலன்

''எங்க வீட்டுக்கு நீங்கதான் போன் பண்ணீங்களா?''

கார்த்திகா என்னைப் பார்த்துத்தான் அந்தக் கேள்வியைக் கேட்டாள். தேகம் முழுக்கக் கருகியிருந்த சருமப் பொசுங்கல்களுக்கு நடுவில் அவளது கண்கள் மட்டும் வெள்ளையாக அலைபாய்ந்தன.

ஜீவா மூலம்தான் கார்த்திகா எங்களிடம் வந்து சேர்ந்தாள். நாங்கள் நவீன இலக்கியம், அரசியல் பேசித் திரிந்து டீமாக மாறியவர்கள். டீம் என்றால் அது ஒன்றும் அவ்வளவு பெரிய டீம் இல்லை. நான், ஜீவா, அக்தர் உசேன், என் பெயர் கொண்ட இன்னொரு செந்தில் என்கிற கவிஞர் நவயுகன்... அவ்வளவுதான். ஓஷோ, பாலகுமாரன் என்று அலைந்து திரிந்து, ஒரு வழியாக எங்கள் இலக்கிய டீமில் வந்து இணைந்த பிறகும் ஜீவா ஒரு சாகசக்காரனாகவும் அப்பாவியாகவும் இருந்தான். இப்போது நினைத்தால் அது ஒரு வரம் என்றுதான் தோன்றுகிறது. முதல் குடி, முதல் சிகரெட்டை எங்கள் டீமுக்கு அறிமுகப்படுத்திய அவனுக்குப் பெண் நண்பிகள் கணிசம். எங்களுக்கு அது மருந்துக்கும் இல்லை. தங்கையின் திருமணத்தில் துணிச்சலாகக் குடித்துவிட்டு பந்தி பரிமாறியது, வீட்டு மொட்டை மாடியில் சிகரெட் குடித்தது, பக்கத்து வீட்டுப் பெண் கொடுத்த காதல் கடிதங்கள் எனக் கதைகதையாகச் சொல்வான். ஆனால், கார்த்திகாவின் கதை, ஜீவாவின் வழக்கமான சாகசக் கதைகளில் ஒன்று அல்ல. அது ஒரு துயரக் கதையாகவும் இன்னொருபுறம் நாங்கள் பேசிக்கொண்டு இருந்த விஷயங்களுக்குச் சவால்விடும் கதையாகவும் இருந்தது!

''அப்பாவை ரயில் ஏத்தப் போனப்போதான் இந்தப் பொண்ணைப் பார்த்தேன். அழுதுக்கிட்டு இருந்தது. சாகற முயற்சியில இருந்தது!'' என்றான் ஜீவா. அவன்தான் பேசிக்கொண்டே இருந்தான். கார்த்திகா ஒன்றும் பேசவில்லை. இறுதி வரை அப்படித்தான். நான் மெள்ள அவளை ஏறிட்டுப் பார்த்தேன். பூசினாற்போன்ற கறுத்த தேகம். அவள் கண்கள் மட்டும் வசீகரமாக இருந்தன. ''கறுத்த பெண்களுக்கு அப்படித்தான். கண்ணு அழகாகத் தெரியும். முகம் கறுப்பா இருக்கும்போது கண்ணு மட்டும் வெள்ளையா இருந்தா தனி அழகுதான்!'' என்பான் அக்தர்.

பத்தாம் வகுப்புத் தேர்வை இரண்டொரு முறை எழுதித் தேர்வாகாததால் வீட்டிலேயே இருந்துவிட்டாள் கார்த்திகா. அப்பா அரசு மருத்துவமனையின் கடைநிலை ஊழியர். அக்கா நர்ஸ். மருத்துவமனை குவார்ட்டர்ஸில் வசித்தார்கள். அதே குவார்ட்டர்ஸில் வசித்த, கல்லூரி முதலாம் ஆண்டு படித்துக்கொண்டு இருந்த பையனுக்கும் கார்த்திகாவுக்கும் காதல். இருவரும் வீட்டைவிட்டு ஓடிப்போனார்கள். மதுரையில் விடுதி ஒன்றில் அறை எடுத்துத் தங்கியிருக்கிறார்கள். காதல், கல்யாணத்தைவிட அவனுக்கு கார்த்திகாவின் தேகம் மீதுதான் ஆர்வம். அவளுக்கோ காதல் என்பது உடலுக்கெல்லாம் அப்பாற்பட்ட, நறுமணம் வீசிக்கொண்டே அந்தரத்தில் மிதக்கும் ஏதோ ஒரு பரிசுத்தமான வஸ்து என்கிற எண்ணம். மீண்டும் மீண்டும் அவன் முயற்சிகள் தொடர, அவனிடம் சொல்லாமல்கொள்ளாமல் மதுரை யில் இருந்து பஸ் ஏறி வீட்டுக்கு ஓடிப்போனாள் கார்த்திகா!

வீடு அவளை ஏற்றுக்கொண்டாலும் அது இயல்பானதாக அமையவில்லை. வசவுகள், சந்தேகங்கள் என நாளும் ஒரு விஷப்பூச்சி கார்த்திகாவைத் தீண்டத் தொடங்கியது. குறிப்பாக, அவள் பைப்பில் தண்ணீர் பிடிக்கும் சமயங்களில் அந்த குவார்ட்டர்ஸ் பையன்கள் கார்த்திகாவை ஏகத்துக்கும் கிண்டல் அடித்துச் சீண்டி இருக்கிறார்கள். 'கார்த்திகா என்பவள் எப்போதும் எந்தப் பையனோடும் ஓடிப்போகத் தயாரானவள்’ என்கிற பிம்பமே அவர்களுக்குள் ஊறிப்போய் இருந்தது. வீட்டின் வசவுகள், வீட்டைச் சுற்றியான வசவுகள் அவளை ரயில் தண்டவாளங்களை நோக்கித் துரத்தியிருந்தன.

''சரிடா, நாம என்ன பண்ண முடியும்?'' என்றான் அக்தர். உண்மைதான். கார்த்திகாவை நடத்துகிற அளவுக்கு எங்கள் வீடு எங்களை மோசமாக நடத்தாவிட்டாலும், அப்படி ஒன்றும் கௌரவமாகவும் நடத்தவில்லை. அமெரிக்க வேலை, ஐ.டி., ஐந்து இலக்கச் சம்பளத்தோடு எங்கள் செட் பசங்கள் செட்டிலாகிவிட, நாங்களோ நிறப்பிரிகை, கோபிகிருஷ்ணன், மிஷல் ஃபூக்கோ என்றிருந்தோம். வீடு எங்களை அனுமதித்ததே பெருந்தன்மையாக இருக்க, கார்த்திகாவை எங்கே கூட்டிப்போவது? அப்போதுதான் தோழர் கேசவனும் ரத்னா தோழரும் நினைவுக்கு வந்தார்கள்.

தோழர்கள் கேசவனும் ரத்னாவும் சேர்ந்து வாழ்ந்துகொண்டு இருந்தார்கள். பெண்ணியத்தின் மீது இருவருக்கும் அபார நம்பிக்கை. ரத்னா தோழர் கிராப் வெட்டி எப்போதும் பேன்ட் சட்டைதான் அணிந்து இருப்பார். காது, மூக்கு, கழுத்து என்று எங்கும் நகை கிடையாது. 'தங்கம் என்பது மஞ்சள் பிசாசு!’ என்பார். தோழர் கேசவன் எங்களுக்கு உதாரணப் பெண்ணியவாதி. மகள் கிளாரா ஜெட்கின் பிறந்த பிறகு அவரே ஆண் கருத்தடை செய்துகொண்டார். வீட்டு வேலைகளை அவர் பகிர்ந்துகொண்டது அவர்கள் குடியிருந்த 'ஸ்டோர்’ஸில் பெண்களின் பிரதான குசுகுசுப் பேச்சாக மாறி இருந்தது. எப்போது தோழர் கேசவனை நினைத்தாலும் கைலியை ஒருக்களித்து வாசலில் அமர்ந்து பாத்திரம் துலக்கிக்கொண்டு இருப்பதான சித்திரமே தோன்றும்.

ல்லோருக்கும் தோசை சுட்டுக்கொண்டுவந்து தந்தார் கேசவன். ரத்னா தோழர்தான் பரிவாக கார்த்திகாவிடம் விசாரித்துக்கொண்டு இருந்தார்.

''உங்க அப்பா மேல கேஸ் கொடுக்கலாமா?''

''வேணாம்க்கா.''

''அந்தப் பையன் மேல?''

''ஐயோ, வேணாம்க்கா.''

இப்படி ஒன்றிரண்டு வார்த்தைகள் பேசுபவளாகத்தான் இருந்தாள் கார்த்திகா. அனேகமாக ஜீவாவோடுதான் அதிகம் பேசியிருப்பாளாயிருக்கும். வீட்டுச் சுவர் முழுக்க மாட்டப்பட்டு இருந்த தலைவர்கள், போராளிகளின் புகைப்படங்கள், புத்தகங்கள், துண்டுப் பிரசுரங்கள் அவளது மிரட்சியை அதிகப்படுத்தி இருக்கும் என்று நினைக்கிறேன். ஆனால், ஓயாது பேசி கிளாரா மட்டும் அவளுக்குக் கொஞ்சம் நெருக்கமாகி இருந்தாள். கார்த்திகா கிளாராவுக்குச் சில கதைகளையும் ரைம்ஸ்களையும் சொல்லிக்கொடுத்ததைப் பார்த்தபோது, அவள் இயல்புநிலைக்கு வந்துவிட்டாள் என்று திருப்தி அடைந்தோம். ''பேசிக்கிட்டு இருங்க... வந்துடறேன்!'' என்றவாறு பேன்ட் மாட்டி வெளியே கிளம்பினார் கேசவன்.

ரு மணி நேரம் கழிந்திருக்கும். கார்த்திகா டி.வி-யில் நகைச்சுவைக் காட்சி ஒன்றைப் பார்த்துக்கொண்டு இருந்தாள். கிளாரா தூங்கியிருந்தாள். கேசவன் இரண்டு ஆண் களோடு உள்ளே நுழைந்தார். அவர்களில் தலை நரைத்த மனிதரின் கண்களில் அதிர்ச்சி அப்பியிருந்தது. இன்னோர் இளைஞனின் கண்களில் ஆத்திரம் உறைந்து இருந்தது. உள்ளே நுழைந்ததும் கார்த்திகாவை அடிக்கத் தொடங்கினான் அந்த இளைஞன். ''ஓடுகாலி நாயே... ஏண்டி மானத்தை வாங்கறே?'' என்று இரண்டொரு முறை சொல்லிக்கொண்டவனாக மீண்டும் மீண்டும் அடிக்கத் தொடங்கினான். எங்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஒரு வார்த்தைகூடப் பேசாமல் கார்த்திகா அடிகளை ஏற்றுக்கொண்டு இருந்தாள். ''என்னங்க நீங்க..? ஒரு பொம்பளைப் புள்ளைய... அதுவும் இன்னொருத்தர் வீட்லவெச்சு அடிக்கிறீங்க?'' என்று கோபத்துடன் குரலை உயர்த்தித் தடுத்தார் தோழர் கேசவன். அந்த அளவில் அவர் ஒரு பெண்ணியவாதியாக இருந்தார்!

அப்பாவோடும் அண்ணனோ டும் கிளம்பும்போது கார்த்திகா, ஜீவாவையும் கிளாராவையும் மட்டும் ஏறிட்டுப் பார்த்தவளா கக் கிளம்பிப் போனாள்.

ரண்டு மாதங்கள் கழிந்துஇருக்கும். கார்த்திகாவை நாங்கள் மறந்திருந்த நேரம். மீண்டும் கார்த்திகாவோடு வந்து சேர்ந்தான் ஜீவா. அவனது அலுவலகத்துக்கே நேரே போயிருக்கிறாள் அவள். எந்தப் பெண் அறிமுகமானாலும் தன் தொலைபேசி எண், அலுவலக முகவரி, மின் அஞ்சல் முகவரி என்று எல்லாவற் றையும் அளித்துவிடுவான் ஜீவா. இப்போது எனக்கு கார்த்திகாவின் மீது பரிதாபம் வரவில்லை. ஆத்திரம்தான் வந்தது. அவளைவிட ஜீவாவின் மீதுதான் எரிச்சல் அதிகமாக வந்தது.

''இதுக்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லைடா. இந்தப் பிரச்னையை நீயாத்தான் சால்வ் பண்ணணும்!'' என்றேன் குரலை உயர்த்தி. ஜீவா மௌனமாக நின்றான். கார்த்திகா இப்போதும் எங்களை நேருக்கு நேர் பார்க்கவில்லை. ஆனால், அவள் முகத்தில் சின்ன சுணக்கம் தெரிந்தது.

''ராகவன்கிட்ட போவோம்டா!'' என்றான் இன்னொரு செந்தில்.

ராகவனும் தோழர்தான். முன்னாள் தோழர் என்றும் சொல்லலாம். ஒரு கம்யூனிஸ்ட் கட்சியில் இயங்கிக்கொண்டு இருந்தவர், 'கட்சியில் ஜனநாயகம் இல்லை’ என்று வெளியேறியவர். ஒரு சின்ன

டெலிபோன் பூத் வைத்திருந்தார். எங்க ளுக்கு வார இறுதியில் குடிப்பதற்கும் இலக்கிய உரையாடல்களை நடத்துவதற்கும் அதுதான் களம். போன் அடித்த இருபதாவது நிமிடம் களத்துக்கு வந்தார் ராகவன். கண்ணாடியை மூக்குத்தண்டில் அழுத்திக்கொண்டே, ''பொண்ணு ரொம்பச் சின்னப் பொண்ணா இருக்கே?'' என்றார்.

''ஆமாம்'' என்றேன்.

லேசாக கார்த்திகாவைப் பார்த்துப் புன்னகைத்தார். கார்த்திகாவும் புன்னகைத்ததாகத்தான் தோன்றி யது. ஒரு பழச்சாறுக் கடையில் ஐந்து பேரும் அமர்ந்திருந்தோம். ஆளுக்கு ஒரு ஜூஸ் ஆர்டர் கொடுத்துவிட்டு, எங்களிடம் எல்லா விவரங்களையும் கேட்டுக் கொண்டார். ''ஏதாவது ஹாஸ்டல்ல சேர்க்கலாம். ஆனா, அதுக்கான காசு கட்டணும். என்ன பண்றது?'' என்றார். யாருக்குத் தெரியும்? அவர் ஏதாவது தீர்வைச் சொல்லி விடுவார் என்பதைப் போல, மூவரும் அவர் முகத்தையே பார்த்துக்கொண்டு இருந்தோம்.

''ம்ம்ம்... மொத தடவை யாராவது கட்டிட்டாக்கூட, மாசா மாசம் ஃபீஸ் கட்டணும். அதுபோக, இந்தப் பொண்ணோட செலவுக்குப் பணம்?'' - ஆக, இந்தப் பிரச்னையில் ஏராளமான கேள்விகள் இருக்கின்றன, அதுவும் பதில் தெரியாத கேள்விகள், மேலும், கேள்விகள் மட்டுமே இருக்கின்றன என்பது எங்களுக்குக் கொஞ்சம் கொஞ்சமாக விளங்கத் தொடங்கியது. இருப்பதிலேயே அதிகமாகக் குழம்பிப்போனவன் ஜீவாதான். 'அதுக்குத்தான் மொதல்லயே சொன்னேனே’ என்கிற ஒரு சின்ன சந்தோஷப் புன்னகையும் தொனியும் எனக்கு வரத் தொடங்கியிருந்தது. கஷ்டப்பட்டு அடக்கிக்கொண்டேன்.

''சரி, என்ன படிச்சிருக்கு?'' - ராகவன் கேட்டார்.

''டென்த் ஃபெயில். மூணு அட்டெம்ப்ட்!''

சலிப்புத் தட்டியது ராகவனின் கண்களில். ''ப்ளஸ் டூ முடிச்சிருந்தாக் கூட எங்கேயாவது வேலைக்குச் சேர்த்துவிடலாம்!''

டைப்பிங், கம்ப்யூட்டர் என்று எதுவும் கார்த்திகாவுக்குத் தெரிந்திருக்க வில்லை. ஐந்து பழச்சாறுகளுக்கான பணத்தைத் தந்தவர், ''ஒரு வேலை இருக்கு... பத்து நிமிஷத்துல வந்துடறேன். அங்கே இங்கே அலைய வேணாம். ஏதாவது ஒரு இடத்துல இருங்க!'' என்று சொல்லிக் கிளம்பிப் போனார்.

ஒரு மணி நேரத்துக்கு மேலாகி இருக்கும். ராகவன் வருவதாகத் தெரியவில்லை. போனும் வந்தபாடு இல்லை. ஜீவாவின் முகத்தில் கலவரம் கூடிக்கொண்டுபோனது. நான்கைந்து முறை மாற்றி மாற்றி ராகவனுக்கு போன் போட்டுப் பார்த்தோம். தோழர் எடுப்பதாக இல்லை. இரண்டு மணி நேரத்துக்குப் பிறகு, அவரிடம் இருந்து போன் வந்தது. உடனடியாக கார்த்திகா வைக் கூட்டிக்கொண்டு வரச் சொன்னார்.

நாங்கள் போனபோது ராகவனுடன் கார்த்திகாவின் அப்பாவும் அண்ணனும் நின்றிருந்தார்கள். ஜீவாவிடம் பேசி எப்படியோ கார்த்திகா அப்பாவின் தொலைபேசி எண்ணை வாங்கியிருக்கிறார் ராகவன். இப்போது கார்த்திகா அப்பாவின் கண்களில் அதிர்ச்சிக்குப் பதிலாக அலுப்பும் சலிப்பும்தான் தெரிந்தன. எங்களை லேசாக முறைத்தவாறு நின்றான் அவள் அண்ணன். தீயணைப்பு நிலையத்தின் அருகில் கார்த்திகாவை அவள் அப்பாவுடனும் அண்ணனுடனும் இன்னொரு முறை அனுப்பிவைத்தோம். இப்போது அவள் ஜீவாவைக்கூட ஏறிட்டுப் பார்க்கவில்லை.

மூன்று வாரங்கள் தாண்டியிருக்காது. கார்த்திகா தீக்குளித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி வந்தது. நானும் ஜீவாவும் போயிருந்தோம். கார்த்திகாவுக்குப் பக்கத்தில் அவளது அம்மா கவலையும் கண்ணீருமாக அமர்ந்து இருந்தார். அக்கா வெளியில் போயிருக்கிறாராம். அப்பாவை யும் அண்ணனையும் காணவில்லை.

''எங்க வீட்டுக்கு நீங்கதான் போன் பண்ணீங்களா?''

இப்போதுதான், இந்தக் கேள்வியைக் கேட்கும்போதுதான் கார்த்திகா முழுதாக என் கண்களை நேருக்கு நேர் பார்த்தவளாகக் கேட்டாள். இல்லை, நான் அவள் வீட்டுக்கு போன் செய்யவில்லை. இன்னொரு செந்தில்தான் போன் செய்திருக்கிறான் என்பது பின்னாளில் தெரிந்தது. அவனுக்கும் இது வரை எந்தப் பெண் தோழியும் வாய்த்தது இல்லை. நட்பை உருவாக்கிக்கொள்வதன் நிமித்தம்தான், கார்த்திகாவிடம் பேசுவதற்காக போன் செய்திருக்கிறான். ஆனால், போனை எடுத்தது அவளது அக்கா. அதன் பின் வசவுகளும் சந்தேகங்களுமாக விஷப் பூச்சிகள் மேலும் மேலும் ஊரத் தொடங்கி இருக்கின்றன. அனேகமாக அவள் கண்களுக்கு அருகில் அந்தப் பூச்சிகள் வந்தபோதுதான், கார்த்திகா தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்து இருக்க வேண்டும்.

கார்த்திகா இறந்த செய்தி எங்களுக்குத் தாமதமாகத்தான் வந்து சேர்ந்தது. அன்று இரவு நானும் ஜீவாவும் நிறைபோதையில் இருந்தோம். ஜீவாவுக்கு அழுகை தாங்க முடியவில்லை. ''ஏன் இப்படிப் பண்ணணும் கார்த்திகா?'' என்றான் அழுகையினூடாக. வார்த்தைகள் துண்டுதுண்டாகத்தான் வந்து விழுந்தன.

உண்மையில் ஜீவா மட்டும் அப்பாவி சாகசக்காரன் இல்லை. கேசவன், ரத்னா, ராகவன் என எல்லோருமே ஏதோ ஒரு வகையிலான அப்பாவி சாகசக்காரர்கள்தான். அவர்களை ஏன் குறை சொல்ல வேண்டும்? நான், அக்தர், செந்தில் என எல்லோரும்தான். வீடு மறுக்கிற ஒன்றை, வீடு விரும்பாத ஒன்றைச் செய்துகொண்டு இருக்கிற சாகசமும், மற்றவர்களிடம் இருந்து எங்களை வித்தியாசப்படுத்திக்கொள்கிற வேட்கையும்தான் நாங்கள். ஆனால், முகத்தில் அறையும் நிஜமான கேள்விகளுக்கு எங்களால் எந்தப் பதிலையும் அளிக்க முடியவில்லை. ஜீவா, நான், அக்தர், நவயுகன், கேசவன், ரத்னா, ராகவன் என சாகசக்காரர்கள் எல்லாம் சேர்ந்து ஒரு பெண்ணைக் கொலை செய்திருக்கிறோம்.

''வீட்டைவிட்டு ஓடிப்போறது, தற்கொலை செஞ்சுக்கிறது - இந்த ரெண்டு எண்ணமும் எல்லார் வாழ்க்கையிலும் ஒருமுறையாவது வந்துட்டுப் போறதுதான். ஆனா, கார்த்திகாவால் முதல் வாய்ப்பை வெற்றிகரமா நிறை வேத்த முடியலை. அதான் ரெண்டாவது வாய்ப்பைத் தேர்ந்தெடுத்துட்டா.

ஆண்களால்தான் வீட்டைவிட்டு ஓடிப் போகவும் முடியும்... தற்கொலை பண்ணிக்கவும் முடியும். பொம்பளைங்களால தற்கொலை மட்டும்தான் பண்ணிக்க முடியும். ஏன்னா, ஒரு பொண்ணு வீட்டைவிட்டு ஓடிப்போறதா இருந்தாக்கூட, அவ இன்னொரு ஆம்பளையோடுதான் ஓடிப் போக முடியும்!''

இதைச் சொல்லும்போது நான் ஜீவாவின் முகத்தை ஏறிட்டுப் பார்க்கவில்லை!

(நன்றி : ஆனந்த விகடன்)

Thursday, October 13, 2011

மண்ணுக்கான விடுதலை அல்ல... மக்களுக்கான விடுதலையே தேவை!



ரீ.சிவக்குமார்
படங்கள் : க.தனசேகரன்

ன வெறி, சாதி வெறி இரண்டுக்கும் எதிரான போராட்டங்களின் குறியீட்டுப் பெயர்தான் கொளத்தூர் மணி. உள்ளூர்ச் சேரிகளில் தீண்டாமை திணிக்கப்பட்டு, ஒதுக்கப்பட்ட தமிழர்களுக்கும் ஈழத்து முள்வேலிகளில் அடைக்கப்பட்ட தமிழர்களுக்கும் சற்றும் சமரசம் இன்றிக் குரல் கொடுப்பவர். மூன்று தமிழர்களின் உயிர் காக்க மரண தண்டனை எதிர்ப்புப் பிரசாரப் பயணத்தில் இருந்தவரைச் சந்தித்தேன்.

''நீங்கள் பெரியார் கொள்கைகள்பால் எப்படி ஈர்க்கப்பட்டீர்கள்?''

''கொளத்தூர் நிர்மலா உயர்நிலைப் பள்ளியில் படித்துக்கொண்டு இருந்தபோது, புலவர் வ.வேணுகோபால் என்ற தமிழ் ஆசிரியர்தான் எனக்கு முதன்முதலில் பகுத்தறிவுச் சிந்தனைகளை அறிமுகப்படுத்தினார். வகுப்பறையில் புராணக் கதைகள் குறித்து அவ்வப்போது விமர்சனங்களை முன் வைப்பார். 'புராணம் என்றால் பழமை, நவீனம் என்றால் புதுமை. புராணக் கதை என்றால் பழைய பொய்’ என்று சொன்ன அவர், 'விடுதலையில் தீபாவளிபற்றி ஒரு கதை வந்திருக்கிறது. படியுங்கள்’ என்றார். அப்போதுதான் முதல்முதலாக விடுதலை இதழைப் படித்தேன். கொஞ்சம் கொஞ்ச மாகப் பெரியாரின் கருத்துகள் என்னை ஈர்த்தன. 1962-ல் அப்போதைய மக்கள வைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்துப் பேசுவதற்காக பெரியார் எங்கள் ஊருக்கு வந்தார். அப்போது பெரியாரின் பேச்சை முழுமையாக உள் வாங்கிக்கொண்டேன் என்று சொல்ல முடியாது. 1971-ல் கொளத்தூரில் பெரியாரை வைத்து பொதுக் கூட்டம் நடத்தியதில் இருந்து என் இயக்கச் செயல்பாடுகள் தொடங்கின.''

''ஒரு பெரியாரிஸ்ட் என்ற முறையில் இன்றைய சூழலில் பெரியாரிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டியவை, விட்டுவிட வேண்டியவை என்று எவற்றைக் கருதுகிறீர்கள்?''

''சாதி ஒழிப்பும் பெண் விடுதலையும்தான் பெரியார் கொள்கைகளின் அடித்தளம். அவரது கடவுள் மறுப்பும் தனித் தமிழ்நாடு கோரிக்கையும்கூட, சாதி ஒழிப்புக் கொள்கை யின் நீட்சிதான். நான் மட்டும் அல்ல, இந்த மானிட சமுதாயமே பெரியாரிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டியது சுய மரியாதையையும் சமத்துவத்தையும்தான். பெரியாரிடம் இருந்து விட்டுவிட வேண்டியது என்று எதுவும் இல்லை. ஆனால், பெரியார் இறந்து 38 ஆண்டுகள் ஆகிவிட்டன. சுற்றுச்சூழல் பாதுகாப்பு, அணு உலை எதிர்ப்பு போன்ற விஷயங்கள் பெரியார் காலத்தில் இல்லை. இப்போது அதை எல்லாம் சேர்த்துப் பேச வேண்டும். மேலும், உலகின் தலைசிறந்த பெண் விடுதலைக் கருத்துகளைச் சொன்னவர் பெரியார். இப்போது பெண் விடுதலை என்பதைத் தாண்டி திருநங்கைகளின் உரிமைபற்றிப் பேசப்படுகிறது. அதேபோல், ஒருகாலத்தில் 'எதை முதன்மைப்படுத்துவது சாதியையா... வர்க்கத்தையா?’ என்கிற கருத்துப் போராட் டம் பெரியார் இயக்கத்துக்கும் கம்யூனிஸ்ட் டுகளுக்கும் இடையே இருந்துவந்தது. ஆனால், சில பத்தாண்டுகளாக கம்யூ னிஸ்ட்டுகள் இந்துத்துவ எதிர்ப்பை முன் வைக்கிறார்கள்; தீண்டாமைப் பிரச்னை களைக் கையில் எடுத்துப் போராடுகிறார் கள். இது பெரியாரியலுக்குக் கிடைத்த வெற்றி. ஆனால், கம்யூனிஸ்ட்டுகள் எப்படி சாதிப் பிரச்னைகளைக் கணக்கில் எடுத்துக்கொள்ளத் தவறினார்களோ, அதேபோல பெரியாருக்குப் பின் பெரியார் இயக்கங்கள் பொதுவுடைமையை அழுத்தமாகப் பேசவில்லை. இன்றைய உலகமயமாக்கச் சூழலில் 'பார்ப்பன - இந்திய தேசிய - பன்னாட்டு கூட்டுக் கொள்ளை எதிர்ப்பு’ என்ற முழக்கத்தை நாங்கள் முன்வைக்கிறோம்.''

'' 'திராவிட அரசியல்தான் இன்றைய பல வீழ்ச்சிகளுக்குக் காரணம். திராவிடம் என்பதே மாயை’ என்று தொடர்ச்சியாக தமிழ் தேசியவாதிகள் பேசிவருகிறார்களே... இன்னும் திராவிட அடையாளத்தைச் சுமக்கத்தான் வேண்டுமா?''

''போதிய புரிதல் இல்லாதவர்கள்தான் அப்படிப் பேசிவருகிறார்கள். மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பிறகு, பெரியார் சாகும் வரை 'தமிழ்நாடு தமிழருக்கே’ என்று தனித் தமிழ்நாடு கோரிக்கையைத்தான் முன்வைத்தாரே தவிர, மலையாளிகள், தெலுங்கர்கள், கன்னடர்களைச் சேர்த்து திராவிட நாடு விடுதலையை முன்வைக்கவில்லை. திராவிடம் என்பது ஏதோ நிலப்பரப்புக்கான அடையாளம் இல்லை. அது இந்துத்துவ எதிர்ப்பின் குறியீட்டுச் சொல். நாங்களும் தனித் தமிழ்நாடு கேட்கிறோம், தமிழ் தேசியவாதிகளும் தனித் தமிழ்நாடு கேட்கிறார்கள். ஆனால், அவர்கள் வெறுமனே மண்ணுக்கான விடுதலையை முன்வைக்கிறார்கள். நாங்கள் மக்களுக்கான விடுதலையை முன்வைக்கிறோம். 'திராவிடர்’ என்ற சொல், பார்ப்பனர் அல்லாத மக்கள் என்ற பொருளில்தான் பெரியாரால் பயன்படுத்தப்பட்டது. திராவிட அரசியல் கட்சிகளின் மீது உள்ள வெறுப்பால் பலர் 'திராவிடம் என்பதே மாயை’ என்று பேசிவருகிறார்கள். உண்மையில் திராவிட அரசியல் கட்சிகளான தி.மு.க., அ.தி.மு.க., ம.தி.மு.க.கூட தமிழர்களிடத்தில்தான் அரசியல் செய்கின்றனவே தவிர, மலையாளி கள், தெலுங்கர்கள், கன்னடர்களிடத்தில் அல்ல. மேலும், சாதி ஒழிப்பு, தாழ்த்தப் பட்டோர் விடுதலை, பார்ப்பன எதிர்ப்பு, இந்துத்துவ எதிர்ப்பு, இந்திய தேசிய எதிர்ப்பு, பெண் விடுதலை... இவை எல்லாம் சேர்ந்ததுதான் பெரியார் முன்வைத்த திராவிட அரசியல். இன்றைய திராவிட அரசியல் கட்சிகள், இவை எதையும் முன்வைப்பது இல்லை. எனவே, திராவிட அரசியல் கட்சிகளை முன்வைத்து திராவிடம் என்கிற கருத்தாக்கத்தையே மறுப்பது அறியாமை.''

''தொடர்ச்சியாக தீண்டாமைக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுக்கிறீர்கள். ஆனால், 'பெரியார் கேரளாவில் நடத்திய வைக்கம் போராட்டம் தவிர, தமிழகத்தில் தீண்டாமைப் பிரச்னைகளுக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுத்தது இல்லை’ என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றதே?''

''தீண்டாமை ஒழிய வேண்டும் என்றால், சாதி ஒழிய வேண்டும்; சாதி ஒழிய வேண்டும் என்றால், இந்து மதம் ஒழிய வேண்டும். இதுதான் பெரியாரின் அடிப்படைக் கொள்கை. இதற்காகத்தான் அவர் வாழ்நாள் முழுக்கப் பாடுபட்டார். சுய மரியாதை இயக்கத்தின் சார்பாக ஏராளமான ஆதி திராவிடர் சுய மரியாதை மாநாடுகளையும் ஆதிதிராவிடர் கிறிஸ்தவர் சுய மரியாதை மாநாடுகளையும் நடத்தினார். முதுகுளத் தூர் கலவரத்தின்போது, தாழ்த்தப்பட்ட மக்களின் பக்கம் நின்று, 'கலவரத்துக்குக் காரணமான பசும்பொன் முத்துராமலிங் கரைக் கைதுசெய்ய வேண்டும்’ என்று உறுதியாக வலியுறுத்தியதும் பெரியார் தான்.

மயிலாடுதுறை அருகே உள்ள காளி மற்றும் மாதிரிமங்கலம் ஆகிய ஊர்களில் 'சாதித் தொழிலைச் செய்ய மாட்டோம்’ என்று தாழ்த்தப்பட்ட மக்கள் நடத்திய பறை தப்பட்டையை எரிக்கும் போராட்டம், காங்கிரஸ் மாநாட்டில் தாழ்த்தப்பட்டவர் களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதை எதிர்த்து நடத்தப்பட்ட போராட்டம் என்று ஏராளமான போராட்டங்களைப் பெரியார் இயக்கம் நடத்தி உள்ளது. ஆனால், அவை எல்லாம் பெரிதாக ஆவணப்படுத்தப்படாததுதான் வரலாற்றுத் துயரம். 1926-ல் சிராவயல் என்ற ஊரில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு தனிக் கிணறு அமைக்கப்பட்டு, அதைத் திறப்பதற்காகப் பெரியார் அழைக்கப்பட்டார். ஆனால், 'பொதுக் கிணறுக்காகப் போராடுங்கள். தாகத்தால் செத்துப்போகலாமே தவிர, தனிக் கிணறு அமைப்பது தீர்வு அல்ல’ என்று பெரியார் மறுத்துவிட்டார். 'பறையன் பட்டம் போகாமல் சூத்திரன் பட்டம் போகாது’ என்று யார் தீண்டாமையை மேற்கொள்கிறார்களோ, அந்த பிற்படுத்தப்பட்டவர் களிடம் பெரியார் பேசினார். அதுதான் புரட்சி.''

''பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் மரண தண்டனையை ரத்துசெய்ய வேண்டும். ராஜபக்ஷேவைப் போர்க் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்று ஜெயலலிதா சட்டமன்றத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றிய பிறகு, ஈழ ஆதர வாளர்கள் சமச்சீர்க் கல்வி, பரமக்குடி துப்பாக்கிச்சூடு, நரேந்திர மோடி உண்ணாவிரதத்துக்கு ஆதரவு போன்ற விஷயங்களில் ஜெயலலிதாவைக் கடுமை யாக விமர்சிப்பது இல்லையே?''

''ஈழ ஆதரவாளர்களில் பலர் சாதி ஒழிப்பு, சிறுபான்மையினர் உரிமைகள், சுற்றுச்சூழல் பிரச்னை, மனித உரிமைகள் ஆகியவற்றில் கவனம் செலுத்தாத போக்கு இருக்கிறது. அதே நேரத்தில், காஷ்மீர், தண்டகாரண்யம், சல்வாஜூடும்பற்றிப் பேசும் பலர் ஈழப் பிரச்னைபற்றிக் கவலைப் படுவது இல்லை. இரண்டு தரப்பிலும் போதாமைகள் இருக்கின்றன. இவை சரி செய்யப்பட வேண்டும்.''

''பிரபாகரன் உயிரோடு இருக்கிறாரா? ஈழத் தமிழர்களின் பிரச்னைகளைத் தீர்க்க என்ன மாதிரியான தீர்வுகளை முன்வைக்கிறீர்கள்?''

''பிரபாகரன் உயிரோடு இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம். ஆனால், உயிரோடு இருக்கிறாரா என்பது தெரியாது. இன்றைய சூழலில், ராஜபக்ஷேயின் போர்க் குற்றங்கள் விசாரிக்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கை வலுவாக முன்வைக்கப்படு கிறது. ஆனால், ராஜபக்ஷே மட்டுமே இனப் படுகொலையில் ஈடுபடவில்லை. எல்லா இலங்கை அதிபர்களுமே தமிழர்களுக்கு எதிராக இனப் படுகொலையில் ஈடுபட்டவர்கள்தான். உயிரோடு உள்ள எல்லா இலங்கை அதிபர்களுமே போர்க் குற்றங்களின் அடிப்படையில் தண்டிக்கப்பட வேண்டியவர்கள்தான். ஈழப் பிரச்னைக்கான தீர்வு தமிழீழம்தான் என்று கருதுகிறோம். அந்த மக்களின் விருப்பமும் அதுதான் என்று உறுதியாக நம்புகிறோம்!''



Monday, September 26, 2011

மரணதண்டனை எதிர்ப்பு : ஜெயலலிதாவை வாழ்த்த வேண்டுமா, வலியுறுத்த வேண்டுமா?

இலங்கை அரசின் மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும், ராஜபக்ஷேவைப் போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும், பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் தூக்குத்தண்டனையை ரத்து செய்ய வேண்டும், கூடங்குளம் அணு உலைப் பணிகளைத் தற்காலிமாக நிறுத்தி வைக்க வேண்டும் என்று அடுக்கடுக்கான தீர்மானங்களைப் போட்டு அசத்துகிறார் ஜெயலலிதா. உண்மையிலேயே அவர் புரட்சித்தலைவிதானோ என்கிற மயக்கமும் பலருக்கு ஏற்படுவதைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், நன்றாகக் கவனித்துப்பார்த்தால், ஜெயலலிதாவால் நிறைவேற்றப்படும் அனைத்து தீர்மானங்களும் மத்திய அரசை வலியுறுத்துவதே தவிர, அவரது செயல்பாடுகளைக் கட்டுப்படுத்துபவையல்ல. பந்தை மத்திய அரசின் கோல்போஸ்ட்க்குத் தள்ளுவதே ஜெயா அரசின் தீர்மானங்கள். ஆனால், சமச்சீர்க்கல்வி குறித்த அணுகுமுறை, பரமக்குடியில் தலித்துகள் மீதான துப்பாக்கிச் சூடு, நரேந்திரமோடியின் உண்ணாவிரதத்துக்கு ஆதரவு தெரிவித்து பிரதிநிதிகளை அனுப்புவது, உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணிக்கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருந்தபோதே வேட்பாளர் பட்டியலை அறிவித்தது ஆகியவை மூலம் பார்ப்பன - இந்துத்துவ - எதேச்சதிகாரப் போக்கிலிருந்து தான் இன்னும் மாறவில்லை என்பதை ஜெயலலிதா நினைவூட்டிக் கொண்டே இருக்கிறார். ஆனால் மேற்கண்ட தீர்மானங்களிலேயே திருப்தி அடைந்து விடுபவர்கள் பரமக்குடி சம்பவம் போன்றவற்றில் அழுத்தமாகத் தனது எதிர்ப்பைத் தெரிவிக்க தயங்குவதைக் காணமுடிகிறது. இந்நிலையில் முவர் மரணதண்டனையை ரத்துசெய்யக் கோரும் ஜெயலலிதாவின் தீர்மானம் குறித்து இன்னொரு பார்வையை முன்வைக்கிறது எஸ்.வி.ஆரின் நூல்..

எஸ்.வி.ராஜதுரை எழுதி சென்னை அரசியல் பள்ளியின் வெளியீடாக வந்துள்ள ‘மரண தண்டனைக்கு எதிரான போராட்டம் : உரத்த சிந்தனைக்காக சில கருத்துகள்’ என்னும் நூல் மரணதண்டனை எதிர்ப்பாளர்களுக்கான இன்னொரு கருவி. எஸ்.வி.ஆர் மரணதண்டனை எதிர்ப்பு உள்ளிட்ட மனித உரிமை செயற்பாடுகளில் தொடர்ந்து பங்கெடுத்துக் கொள்பவர் என்பதால் அதுதொடர்பாகச் சட்டரீதியான பல தரவுகளை இந்தப் புத்தகத்தில் முன்வைக்கிறார். இந்நூலில் பல்வேறு விஷயங்கள் விளக்கப்பட்டாலும் முக்கியமானது மரணதண்டனையை ரத்து செய்வதில் மாநில அரசுக்கு உள்ள அதிகார வரம்பெல்லை குறித்தது. ‘பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்குத்தண்டனையை ரத்து செய்ய வேண்டும்’ என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய கையோடு ‘குடியரசுத்தலைவரால் ஒருவரின் கருணை மனு நிராகரிக்கப்பட்ட பிறகு மாநில அரசு அதில் தலையிட முடியாது’ என்றும் ஜெயலலிதா கூறினார். ஆனால், இந்த வாதம் தவறானது என்பதற்குப் பல வாதங்களையும் உதாரணங்களையும் அடுக்கடுக்காக முன்வைக்கிறார் எஸ்.வி.ஆர்.

‘மரணதண்டனை விதிக்கப்பட்ட ஒருவரின் கருணைமனு மீது முடிவெடுக்கும் அதிகாரத்தை அரசியல் சட்டப்பிரிவு 72 குடியரசுத்தலைவருக்கு வழங்குகிறது என்றால் அதே அதிகாரத்தைப் பிரிவு 161 மாநில ஆளுநருக்கு வழங்குகிறது. ஆனால் அதேநேரத்தில் இந்த அதிகாரங்கள் இணையான அதிகாரங்களே (Parellel power) தவிர படிநிலை அதிகாரங்கள்(Hierarchial power) அல்ல. அதாவது உச்சநீதிமன்றம் ஒரு தீர்ப்பை வழங்கியபிறகு அந்தத் தீர்ப்பில் மாநில உயர்நீதிமன்றங்கள் தலையிட முடியாது என்பது மாதிரியான அதிகாரம் அல்ல இது. எனவே குடியரசுத்தலைவர் ஒரு கருணைமனுவை நிராகரித்த பிறகும் கூட மாநில ஆளுநர் அந்தக் கருணைமனு மீது முடிவெடுக்கலாம். மேலும் குடியரசுத்தலைவரோ ஆளுநரோ இதுதொடர்பாக்ச் சுயேச்சையாக முடிவெடிக்க முடியாது, மத்திய, மாநில அமைச்சரவைகளின் வழிகாட்டுதலின்படியே எடுக்க முடியும்’ என்று அந்தப் புத்தகத்தில் வலியுறுத்தும் எஸ்.வி.ராஜதுரை அதற்கு உதாரணமாக இரண்டு உச்சநீதிமன்ற முடிவுகளையும் சுட்டிக் காட்டுகிறார். ((MataRam vs Union of India (1981) 1SCC 107; Kehar Singh vs Union of India (1989) 1 SCC 204)

‘குடியரசுத்தலைவரால் நிராகரிக்கப்பட்ட கருணைமனு மீது மாநில அரசு தலையிட முடியாது’ என்பதற்கான காரணமாக ஜெயலலிதா ஒரு கடிதத்தைச் சுட்டிக்காட்டினார். 1991, மார்ச் 5 அன்று மத்திய அரசு மாநில அரசுகளுக்கு அனுப்பிய கடிதமே அது. ஆனால் ‘இந்தக் கடிதம் என்பது நிர்வாகம் தொடர்பான ஆணையே அன்றி அரசியல் சட்டத்தைப் போல இறுதிப்படுத்தப்பட்ட அதிகாரம் அல்ல’ என்று வாதிடுகிறார் எஸ்.வி.ஆர். மேலும் இந்தக் கடிதம் எழுதப்பட்ட பின்னணியை அறிந்துகொண்டாலே மத்திய அரசின் இந்தக் கடிதம் எத்தகைய அதிகார வரம்புகளைக் கொண்டிருக்கிறது என்பதையும் புரிந்துகொள்ளலாம்.

1965ல் பஞ்சாப் மாநில முதல்வர் பிரதாப்சிங் கெய்ரோனைக் கொலை செய்ததாகத் தயாசிங் என்பவர் கைது செய்யப்பட்டவர். 1978ல் அவருக்கு மரணதண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டது. 1980ல் செய்த மேல்முறையீட்டில் உச்சநீதிமன்றமும் அந்தத் தீர்ப்பை உறுதி செய்தது. அவரது கருணைமனுக்களும் ஆளுநராலும் குடியரசுத்தலைவராலும் நிராகரிக்கப்பட்டன. ஆனால் இதற்கிடையில் பஞ்சாபில் இருந்து பிரிக்கப்பட்டு ஹரியானா மாநிலம் அமைக்கப்பட்டிருந்தது. 1988ல் தயாசிங் ஹரியானா ஆளுநருக்கு அனுப்பிய கருணைமனுவின் அடிப்படையில் தூக்குத்தண்டனையை நிறைவேற்ற இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் அலிப்பூர் சிறைக்கைதி ஒருவர் தயாசிங்கை விடுதலை செய்ய உத்தரவிட வேண்டி 1990ல் உச்சநீதிமன்றத்துக்குக் கடிதம் எழுதுகிறார். இதையே ரிட் மனுவாகக் கொண்டு உச்சநீதிமன்ற பெஞ்ச் தயாசிங் வழக்கை விசாரிக்கத் தொடங்கியது. அப்போதுதான் ஜெயலலிதா சுட்டிக்காட்டும் கடிதத்தை மத்திய அரசு உச்சநீதிமன்ற பெஞ்சு முன் சமர்ப்பித்தது. ‘குடியரசுத்தலைவரால் கருணைமனு நிராகரிக்கப்பட்ட பிறகு அதில் மாநில ஆளுநர் தலையிட முடியாது’ என்றும் தெரிவித்தது. ஆனால், உச்சநீதிமன்ற பெஞ்ச் அந்தக் கடிதத்தைப் பொருட்படுத்தவேயில்லை. 1991ல் தயாசிங்கின் மரணதண்டனை ரத்து செய்யப்பட்டு ஆயுள்தண்டனையாகக் குறைக்கப்பட்டது.

ஜெயலலிதா ‘மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை’ என்பதற்கான ஆதாரமாகச் சுட்டிக்காட்டும் கடிதத்தின் பின்னணியில் உள்ள வழக்கிலேயே மரணதண்டனை ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் 2000ல் கருணாநிதி ஆட்சியின்போது பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் கருணை மனுக்கள் ஆளுநரால் நிராகரிக்கப்பட்டதையே காரணமாகக் காட்டி மீண்டும் மீண்டும் ஜெயலலிதா பல்லவி பாடுவதும் சரியானது அல்ல. ஏனெனில் ‘குடியரசுத்தலைவராலும் ஆளுநராலும் கருணைமனுக்கள் நிராகரிக்கப்பட்டாலும் மாறிய சூழ்நிலைமைகள் அடிப்படையில் மீண்டும் குடியரசுத்தலைவருக்கும் மாநில ஆளுநருக்கும் கருணைமனுக்கள் அனுப்பலாம்’ என்பதற்கும் தயாசிங்கின் வழக்கே உதாரணம். ஒருவேளை மூவரும் தங்கள் மரணதண்டனையைக் குறைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளாவிட்டாலும் அரசியல் சட்டப்பிரிவு 54ன்படி மாநில அரசு தண்டனையைக் குறைக்க சுயேச்சையாக முடிவெடுக்கலாம். புலவர் கலியபெருமாள் கருணைமனு அனுப்பாதபோதும் தமிழக அரசு முன்வந்து அவரது மரணதண்டனையை ஆயுள்தண்டனையாக மாற்றியதே இதற்குச் சிறந்த முன்னுதாரணம்.

‘மாநில அரசாங்கமும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு என்பதால் அது மக்களின் இறையாண்மையைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. எனவே மாநில அமைச்சரவை முடிவின்படி மரணதண்டனையை ரத்து செய்ய மாநில ஆளுநருக்கு உள்ள அதிகாரமும் இறையாண்மை அதிகாரம்தான்’ என்று உச்சநீதிமன்றத் தீர்ப்பு ((2003(7)SCC 121) கூறுகிறது. மத்திய அரசு கொண்டுவரவுள்ள ‘வகுப்புவாதத் தடுப்பு மசோதா’ மாநில அரசுகளின் அதிகாரங்களைப் பறிப்பதாக மற்ற மாநில முதல்வர்களுக்கு கடிதம் எழுதும் ஜெயலலிதா, மரணதண்டனையைக் குறைப்பதிலும் மாநில அரசின் உரிமையை வலியுறுத்த வேண்டும். மாறாக, மத்திய அரசு எழுதியுள்ள ஒரு கடிதத்தையே அடிப்படையாக வைத்து தன் பொறுப்பையும் அதிகாரத்தையும் உரிமையையும் தட்டிக்கழிப்பது சரியல்ல என்று அழுத்தமாகவும் ஆணித்தரமாகவும் சுட்டிக்காட்டுகிறார் எஸ்.வி.ஆர்.

எனவே உடனடியாக ஜெயலலிதா பேரறிவாளன், சாந்தன், முருகன் மூவருக்கும் தானாகவே மரணதண்டனையை ரத்துசெய்யும் தீர்மானத்தை அமைச்சரவையில் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்ப வேண்டும் என்பதுதான் இன்று நாம் வலியுறுத்த வேண்டிய கோரிக்கை.

Friday, September 23, 2011

இவர்கள் இயற்கையின் மக்கள்!

ரீ.சிவக்குமார், படம் : கே.கார்த்திகேயன்

ந்தியா முழுவதும் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் பழங்குடிகள் குறித்து ஆய்வு செய்பவர்கள் ரெங்கையா முருகனும் ஹரிசரவணனும். இவர்கள் இருவரும் நாட்டுப்புற ஆய்வு மாணவர்களோ, மானுடவியல் துறைப் பேராசியர்களோ அல்ல. ரெங்கையா முருகன், சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தில் (M.I.D.S) நூலகர். ஹரிசரவணன், ஆங்கில இலக்கியப் படிப்பைப் பாதியில் நிறுத்தியவர். பழங்குடிகள் குறித்து இவர்கள் எழுதியுள்ள 'அனுபவங்களின் நிழல்பாதை’ நூல் தொ.பரமசிவன், பக்தவச்சல பாரதி போன்ற ஆய்வாளர்களிடம் பெரும் வர வேற்பைப் பெற்றது.

''காட்டுப் பன்றி ஒன்று கிழங்கை அகழ்ந்து தின்ற பிறகு, மிச்சம் இருக்கும் கிழங்கைப் பழங் குடிகள் தின்பதாகப் பழந்தமிழ் இலக்கியத்தில் பதிவுகள் உள்ளன. அந்த வழக்கம் இன்றும்பழங்குடி களிடம் உள்ளது. நமது ஆதி வாழ்க்கையைத் தேடி அலையும் வேட்கைதான் எங்களைக் காடுகளை நோக்கிச் செலுத்தியது. ஆதிவாசிகள் என்றாலே நிர்வாணமாகத் திரிபவர்கள், நர மாமிசம் உண்பவர் கள், வரைமுறையற்ற பாலுறவுகொள்பவர்கள் என்ற தப்பான கற்பிதங்கள் நம்மிடம் உள்ளன. ஆனால், உண்மையில் நாகரிகச் சமுதாயம் என்று சொல்லிக்கொள்கிற நம்மைவிட, மேம்பட்ட கலா சாரம் கொண்டவர்கள் ஆதிவாசிகள். தேவைக்கு மேல் எதையும் பயன்படுத்தாத வாழ்க்கை, அடுத்த வர் உடைமைகளை ஆக்கிரமிக்காத பேராண்மை, எல்லா வளங்களையும் பகிர்ந்து வாழ்வதுஆகியவை இந்தியா முழுக்கப் பரவிக்கிடக்கும் ஆதிவாசிகளின் பொதுக் குணங்கள்!'' என்று சொல்லும் ஹரிசரவண னின் வார்த்தைகளில் அடர்ந்து செறிந்த காட்டின் வனப்பையும் அருவியின் குளிர்ச்சியையும் உணர முடிகிறது.

''இயற்கை சார்ந்த வாழ்க்கை அவர்களுடையது. ஆனால், நாகரிகம், அறிவியல், வளர்ச்சி என்ற பெயரால் நம்மால் திணிக்கப்பட்டவை அவர்களின் வாழ்க்கையையும் இயற்கையின் ஆன்மாவையும் குலைத்து இருக்கின்றன. உதாரணத்துக்கு, மத்திய இந்தியாவில் வாழக்கூடிய பழங்குடிகள், ஊட்டியில் வசிக்கும் படுகர்கள், இருளர்கள் ஆகியோரிடம் ரத்த சோகை அதிகமாகக் காணப்படுகிறது.காரணம், அவர்களது மண்ணுக்கு ஏற்ற தானியங்களை விளைவிப்பதற்குப் பதிலாக, பிரிட்டிஷ்காரர்களால் திணிக்கப்பட்ட உருளைக் கிழங்கு, முட்டைக்கோஸ், பீட்ரூட், கேரட், காலிஃப்ளவர் போன்ற காய்களை அவர்கள் விளைவித்துக்கொண்டு இருக்கிறார்கள்!'' என்ற ரெங்கையா முருகனின் வார்த்தைகளில் அவ்வளவு வருத்தம்.

'' 'போட்டிகள் நிறைந்த உலகமயச் சூழல்’ என்ற பெயரில் யாரும் யாரையும் ஏமாற்றலாம், யாரும் எந்தப் பகுதியையும் ஆக்கிரமிக்கலாம் என்கிற தப்பான உணர்வு நம்மிடையே விதைக்கப்பட்டு உள்ளது. ஆனால், இதற்கு முற்றிலும் நேர்மாறானது ஆதிவாசிகளின் வாழ்க்கை. ஒடிஷா மாநிலத்தில் வசிக்கும் பூஞ்சியா பழங் குடி மக்கள், தங்கள் வாழ்க்கையைத் தங்கள் எல்லைக்குள்ளேயே அமைத்துக்கொள்கின்ற னர். இத்தனைக்கும் வரையறுக்கப்பட்ட எல்லைக் கோடுகள் என எதுவும் கிடையாது. எல்லாமே மனக் கணக்குதான். ஒரு பூஞ்சியா ஆதிவாசி தங்களது எல்லைப் பகுதியைத் தாண்டி வேறு ஒரு பகுதியில் ஒரு சுள்ளி பொறுக்கி வந்தால்கூட, அந்த பூஞ்சியா இனமே ஒன்று சேர்ந்து அவரின் வீட்டை எரித்துவிடுவார் கள். ஒருவர் வீடு கட்ட வேண்டும் என்றால், எல்லோரும் அவருக்கு உதவுவார்கள். விளைச் சல் அவர்களுக்குத் தனித்தனியாக இருந்தா லும் கூட்டு அறுவடைதான். 20 மூட்டை நெல் விளைவித்தவருக்கும் இரண்டு மூட்டை நெல் விளைவித்தவருக்கும் சமமாகத்தான் விளைச்சல் பகிர்ந்து அளிக்கப்படும். குஜராத் தின் டாங்கு பகுதியில் வசித்து வரும் குக்ணா பழங்குடிகளிடம் ஒரு தனியான ராமாயணம் நிலவி வருகிறது. அந்த ராமாயணத்தில் அயோத்தி, இலங்கை எல்லாமே அவர்கள் வசிக்கும் நிலப்பரப்பில் தான் அமைந்து இருக்கிறது. அந்தக் கதையில் சீதை சுள்ளி பொறுக்குபவள், விருந்தினர்களுக்குத் தேநீர் தயாரித்து உபசரிப்பவள். ராஜராஜ சோழன் காலம் தொடங்கி இன்றைய முதல்வர் வரை நமக்கு எழுதப்பட்ட வரலாறுகள் உண்டு. ஆனால், ஆதிவாசிகளுக்கோ ஆயிரக் கணக்கான ஆண்டு வரலாறும் வாய்மொழி வரலாறே. அவற்றைக் கதைப் பாடல்களாகப் பாடி பல தலைமுறைகளாகக் கடத்திச் சேகரித்து வருகின்றனர். வாய்மொழி வரலாறு, அழகான கை வினைகள், காடுகளின் ஒவ்வோர் அங்குலத்தையும் அறிந்து வைத்து இருக்கிற அறிவுநுட்பம், விலங்கு களையும் பறவைகளையும் பாது காத்து இயற்கையின் சமநிலை குலையாமல் வாழ்கிற வாழ்க்கை என்று ஒவ்வோர் அம்சத்திலும் அவர்கள் நம்மை விஞ்சியே இருக் கிறார்கள்!'' என்று ஆச்சர்யத் தகவல் சொல்கிறார் ஹரி.

''ஆதிவாசிகள் நிர்வாணமாக இருப்பார்கள் என்பதும் தவறான புரிதலே! அந்தமானில் வசிக்கும் சென்டினல் பழங்குடிகள் மட்டுமே நிர்வாணமாக இருப்பார்கள். மத்திய இந்தியாவில் வசிக்கும் பழங்குடிப் பெண்கள் தங்கள் மார்புகளை வெறும் ஆபரணங்களால் மறைப்பதை அங்கு யாரும் வக்கிரமாகப் பார்ப்பது இல்லை. அங்கு பெண்களுக்குத் தங்கள் துணையைத் தேர்ந்தெடுத்துக்கொள்வதற்கும் மண விலக்கு செய்வதற்கும் முழு உரிமை உண்டு.முக்கிய மாகப் பழங்குடிகளிடத்தில் குடும்ப வன்முறை இல்லை. அவர்கள் தாங்கள் வளர்க்கும் நாயைக்கூட அடிப்பது இல்லை. விபசாரமும் இல்லை, பாலியல் பலாத்காரமும் இல்லை. அவ்வளவு ஏன், ஒரே ஒரு பிச்சைக்காரர்கூடப் பழங்குடிகளிடத்தில் இல்லை. மன நோயாளிகளை அவர்கள் தெய்வமாகக் கருதி, வீட்டுக்கு அழைத்து உணவும் மதுவும் கொடுத்து உபசரிக்கிறார்கள். ஆனால், நாமோ மெள்ள மெள்ள அவர்கள் பராமரிக்கும் காட்டு வளத்தைச் சுரண்டி, அவர்களின் வேர்களைப் பிடுங்கி வேறு ஒரு இடத்தில் நட முயற்சிக்கிறோம். பழங்குடிகளைக் கையாள்வதில் பிரிட்டிஷ்காரர்களுக்கும் இன்றைய ஆட்சியாளர்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. குஜராத்தில் வசிக்கும் ரத்வா என்னும் பழங்குடிகள், பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் குற்றப் பரம்பரையின ராக அறிவிக்கப்பட்டனர். இன்றும் அங்கு ஏதாவது திருட்டு என்றால், முதலில் போலீஸ் பிடித்துச்செல்வது அவர்களையே. ரத்வாக்களின் சுவரோவியங்களில் போலீஸ் ஜீப் இடம் பெறும் அளவுக்கு மோசமான வன்முறையை நாம் நிகழ்த்தியிருக்கிறோம்!'' என்று ஆவேசமாகிறார் ரெங்கையா முருகன்.

''பிரிட்டிஷ்காரர்களுக்கு எதிராக சிப்பாய் புரட்சிக்கு முன்பு போராடியவர்கள் பழங்குடிகளே. கேரளாவில் பழசிராஜாவுக்கு உதவிய வயநாடு பழங்குடிகளான குரிசேரியான், முண்டாக்கள், குந்தா த்ர்வாபோல ஏராளமான பழங்குடி மக்களின் விடுதலைப் போராட்டங்கள் ஆவணப்படுத்தப்படவே இல்லை.

உலகமயமாக்கல், வளர்ச்சி, தாராளமயமாக்கல் என்ற பெயர்களில் கொஞ்சம் கொஞ்சமாக அவர்கள் வாழ்க்கையில் இருந்தே அவர்களை விரட்டிக் கொண்டு இருக்கிறோம். இன்று சென்னையில் வசிக்கும் வட இந்திய இளைஞர்களில் கணிச மானவர்கள் சட்டீஸ்கர், ஜார்க்கண்ட், மணிப் பூரைச் சேர்ந்த பழங்குடிகள். டெல்லியிலும் மும்பை யிலும் இருப்பதைவிட, அவர்கள் சென்னையில் பாதுகாப்பாக உணர்கிறார்கள். ஆனால், விரிந்து பரந்த மலையைத் தங்கள் வீடாக நினைக்கும் அந்தப் பழங்குடி இளைஞன் இப்போது வசிப்பதோ வெந்து கருகும் ஆஸ்பெஸ்டாஸ் கூரையின் கீழேதான். பிரம்ம புத்ரா நதியிலும் மலையின் தாடியென வளர்ந்து நீண்ட அருவியிலும் நீந்திக் குளித்துக் களித்த மலைமகனுக்கு இன்று குளிக்கக் கிடைப்பதோ முக்கால் பக்கெட் தண்ணீர்!'' - முடிக்கும்போது வேட்டையாடப்பட்ட ஒரு மிருகத்தின் வலியைப் போல இருவரின் வார்த்தைகளிலும் சோகம் சூழ்ந்து நிற்கிறது!

Tuesday, June 1, 2010

நண்பனைப் போல எப்படி நடிக்கிறீர்கள் சிவராமன்?

அன்பு நண்பர்களுக்கு...

மூன்றுநாட்களாக இணையத்தின் பக்கம் வர இயலாத அளவு சில தனிப்பட்ட வேலைகள். வந்து பார்த்தால் நர்சிம்-சந்தனமுல்லை-வினவு-பைத்தியக்காரன் சர்ச்சைகளைப் பார்க்க நேர்ந்தது. நான் கள்ளமௌனம் சாதிப்பதாக தொடர்ச்சியான குற்றச்சாட்டுகள், இதுதான் சாக்கென்று தனிப்பட்ட வன்மத்தோடு அள்ளித் தெளிக்கப்பட்ட அவதூறுகள். என் எழுத்தைப் பல ஆண்டுகாலமாக வாசித்து வருபவர்கள் நான் இதுமாதிரியான ஆண் திமிரை ஆதரிப்பவனில்லை என்பதை அறிவார்கள். அது நர்சிம்மிடமிருந்து வந்தாலும் சரி, வினவிடமிருந்து வந்தாலும் சரி, அது கண்டிக்கத்தக்கதுதான். குறிப்பாக நர்சிம்மின் ‘பூக்காரி’ பதிவு, ‘ஒரு பெண் பொதுவெளிக்கு வந்தாலே அவளைத் தேவடியாளாகப் பார்க்க வேண்டும்’ என்கிற உச்சபட்ச ஆண்திமிர். அதைப் புனைவு என்றோ பழிக்குப் பழி என்றோ நியாயப்படுத்தி விட முடியாது. ஆனால் ‘தமிழ்மணத்தை விட்டு நர்சிம்மை நீக்க வேண்டும்’ என்பது மாதிரியான கோரிக்கைகளில் எனக்கு உடன்பாடு கிடையாது. எந்த ஒரு மோசமான கருத்துக்கும் இடம் வேண்டும் என்பதுதான் எனது நிலைப்பாடு. மேலும் ‘இதுமாதிரியான பதிவர்கள் திரட்டியில் இருந்தால் பெண் எழுத்தாளர்கள் இருக்க முடியாது’ என்றால் திரட்டியை விட்டு அனுப்பிவிட்டால் மட்டும் அது சரியாகிவிடுமா, என்ன? தொடர்ச்சியாக இத்தகைய ஆண் திமிர், அது எந்த இடத்திலிருந்து வந்தாலும் அதை அம்பலப்படுத்தி எழுதுவது ஒன்றுதான் சரியான வழி. ஆனால் ஆணாதிக்கத்தை எதிர்க்கிறேன் என்ற பெயரில் நடந்த ஒரு அறமற்ற செயல் குறித்து எழுதுவதற்காகத்தான் இந்த பதிவு. வினவில் வந்த பதிவு, சிவராமன் எழுதியதாக அரசல்புரசலாகச் செய்திகள் எழுந்தவுடன், ‘நான் எழுதினாலும் அப்படித்தான் எழுதியிருப்பேன்’ என்று சிவராமன் எழுதியிருக்கிறார். ஆனால் நண்பர்களே நூற்றுக்கு நூறு சதவிகிதம் அது சிவராமனால் எழுதப்பட்டதுதான். எழுதப்பட்ட பதிவு, சந்தனமுல்லைக்கு அனுப்பப்பட்டு, பின் இறுதிப்படுத்தப்பட்டு வினவுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. வினவு தோழர்கள் அதை எடிட் செய்து தங்கள் பெயரில் பதிவாகப் போட்டுள்ளனர். சிவராமன் எழுதி, வினவுக்கு அனுப்பிய, எடிட் செய்யப்படாத பிரதியைக் கீழே பதிவிடுகிறேன். இது எப்படி கிடைத்தது என்கிற கேள்வி தேவையற்றது. சிவராமனுக்குப் பிடித்த மொழியில் சொல்வதென்றால் ‘எல்லாம் இங்கிருந்தே எடுக்கப்பட்டது’. இரண்டு பிரதிகளையும் நண்பர்கள் ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்ளலாம். என்னைப் பற்றி ஆழ்மன வக்கிரத்தோடு சிவராமன் எழுதி, வினவு எடிட் செய்த பகுதிகளை மட்டும் சிவப்பு வண்ணம் பூசியிருக்கிறேன்.
--------------------
சொல்லுங்கள், பதிவர் நர்சிம்மை என்ன செய்யலாம்?

வலையுலகில் ஒரு வன்புணர்ச்சி நடந்தேறியிருக்கிறது. துடிக்கத் துடிக்க வன்னியர் குல சத்திரியர் என்ற மிக பிற்பட்ட சமூகத்தை சேர்ந்த பதிவர் சந்தனமுல்லையை பிராமண சமூகத்தை சேர்ந்த பதிவர் நர்சிம் தன் எழுத்துக்களால் வன்புணர்ச்சி செய்திருக்கிறார். பார்ப்பனீய திமிர் என்பதைத் தாண்டி இதில் வேறு எதுவும் இல்லை என ஒற்றை பார்வையுடன் இந்தச் சம்பவத்தை குறுக்கிவிட முடியாது. இப்படியொரு கொடூரத்தை நிகழ்த்தியிருக்கும் பதிவர் நர்சிம்மை என்ன செய்யலாம் என்று பார்ப்பதற்கு முன்னர் இது தொடர்பான இன்னொரு கேள்விக்கு விடை தேடுவது நம் புரிதலுக்கு வழிவகுக்கும்.

'ஏன் செய்யவேண்டும்?'

இந்த இரண்டாவது கேள்விக்கு முதலில் விடை தேடுவோம். இதற்கு சில பழைய கணக்குகளை தூசி தட்ட வேண்டியிருக்கிறது. பல பதிவர்களும் குறிப்பிடுவது போல் இது 'ஒரு இடுகை' சார்ந்த பிரச்னை இல்லை. கிட்டத்தட்ட 18 மாத ஆணாதிக்க பகை. பார்ப்பனீயத்தின் விஷத்துக்கு பல்லாயிரம் ஆண்டுக்கால வரலாறு உண்டு.

பழைய கணக்கு

'நான் கடவுள்' திரைப்படம் வெளிவந்த நேரம். பல ஆண் பதிவர்கள், இந்தப் படத்தை பெண்கள் பார்க்கக் கூடாது என்று விமர்சனம் எழுதியிருந்தார்கள். இன்று வன்புணர்ச்சி செய்திருக்கும் நர்சிம் தரப்பில் நியாயம் இருப்பதாக பேசும் வடகரை வேலன் உட்பட பலரும் இந்த வகையான கருத்தையே முன்வைத்தார்கள். அப்போது சந்தனமுல்லையும், ராப்பும் (வெட்டி ஆபிசர் என்ற பெயரில் வலைத்தளம் நடத்தியவர். இப்போது வலையுலகில் அவர் எழுதுவதில்லை) 'இது அபத்தமான கருத்து. பிரசவ வேதனையையே அனுபவித்து கடந்து செல்லும் துணிவு பெண்களுக்கு உண்டு. அப்படியிருக்க ஒரு படத்தை பெண்கள் பார்க்கக் கூடாது என்று தடுக்க நீங்கள் யார்? அப்படத்தில் பெண்களே நடிக்கவில்லையா?' என்ற பொருள் பட எதிர்வினை புரிந்தார்கள்.

இதை சற்றும் எதிர்பார்க்காத ஆண் பதிவர்களுக்கு சந்தனமுல்லை - ராப் மீது வெறுப்பு படிய ஆரம்பித்தது. இந்த வகையான ஆண்கள், தங்கள் வீட்டு பெண்களை வேலைக்கு அனுப்புவார்கள் - அனுப்புகிறார்கள். அதையே சுதந்திரம் என்றும் அறிவிக்கிறார்கள். ஆனால், இந்த சுதந்திரத்தை அவர்கள் அனுமதித்ததே ஏடிஎம் மிஷினாக மட்டுமே பெண்களை பார்க்கும் பார்வைதான். பொருளாதார ரீதியாக தாங்கள் உயர பெண்களை ஒரு கருவியாக மட்டுமே பயன்படுத்த நினைக்கிறார்கள். இதைத்தாண்டி பெண்கள் வேறு எந்தவிதமான உரிமைகளையும் கேட்டு விடக் கூடாது என்பதில் 24 மணிநேரங்களும் கவனமாக இருக்கிறார்கள். இப்படிப்பட்ட பார்வை கொண்ட ஆண்களுக்கு சந்தனமுல்லை - ராப் ஆகியோரின் எதிர்வினை எந்தளவுக்கு அதிர்ச்சியை கொடுத்திருக்கும் என்பதை சொல்லத் தேவையில்லை. இந்த புள்ளியிலிருந்து அவர்களின் ஆழ்மனதில் இவர்கள் இருவர் மீதும் வெறுப்பு படிய ஆரம்பித்தது என்று கொள்ளலாம். இவர்கள் பிறப்பால் பிராமணர்கள் அல்ல. ஆனால், பிராமணர்களுக்கு மட்டுமே அறிவு உண்டு என்பதை ஆழ்மனதில் ஏற்று மனுதர்மத்தை உயர்த்திப் பிடிப்பவர்கள்.

கார்க்கி - ராப் - சந்தனமுல்லை
முன்னணி படைத்தளபதியாக இப்போது நர்சிம்மை ஆதரிக்கும் கார்க்கி, முன்பு ஹைதராபாத்திலுள்ள ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தவர். இப்போது சென்னையில் சொந்தமாக ஒரு நிறுவனத்தை நடத்தி வருவதாக அறிகிறோம். தனது வலைத்தளத்தில் தன் அக்கா மகன் குறித்து அவ்வப்போது இடுகைகள் எழுதுவார். அந்தச் சிறுவன் சிரித்தாலும் பதிவு. அழுதாலும் பதிவு. கிண்டல் அடித்தாலும் பதிவு என்று எழுதும் இந்த கார்க்கி -

தன் மகள் பப்புவின் வளர்ச்சி குறித்து அங்குலம் அங்குலமாக எழுதும் சந்தனமுல்லையின் பதிவுகளை உண்மையில் ஆதரிக்க வேண்டுமல்லவா? ஆனால், எதிர்க்கிறார். என்ன காரணம்?

கார்க்கியின் வலைத்தளத்தை ஒன்றிரண்டு முறை பார்வையிட்டாலே எந்தளவு ஆண் மைய திமிருடன் அவர் எழுதுகிறார் என்பதை உணரலாம். காமம் சார்ந்த பார்வையின்றி வேறு எப்படியும் அவர் பெண்களை அணுகுவதில்லை. இந்த கார்க்கியும் - வெளிநாட்டில் வசிக்கும் ராப்பும் ஆரம்பத்தில் நண்பர்களாக இருந்தார்கள். கார்க்கி தொடர்ந்து பெண்களை இழிவுப்படுத்தி எழுதுவதை, ராப் கண்டித்தார். உடனே கார்க்கி, 'ராப்' என தலைப்பிட்டு எவ்வளவு மோசமாக முடியுமோ அவ்வளவு கீழ்த்தரமாக பெண்களை இழிவுப்படுத்தி ஒரு இடுகையை எழுதினார். இதற்கு எதிர்வினையாக ராப், ஒரு இடுகையை பதிவிட்டார். அதில் எந்த வாசகமும் இடம்பெறவில்லை. ஒரேயொரு குப்பைத்தொட்டியின் படம். அதில் கார் கீயை தூக்கிப் போடுகிறார்கள். இடுகையே அவ்வளவுதான்.

இதற்கு 'சபாஷ்... கலக்கிட்ட... சரியான எதிர்வினை' என்று பொருள்தரும் மறுமொழியை சந்தனமுல்லை எழுதினார். சந்தனமுல்லை மீது கார்க்கி கொள்ளும் கோபத்துக்கு அடிப்படை இந்த மறுமொழிதான். அதனால்தான் இப்போது 'மயில் (விஜி) தளத்தில் சந்தனமுல்லையின் மறுமொழி கண்டிக்கத்தக்கது' என கார்க்கி கூச்சலிடுகிறார். உண்மையில் அந்த பழைய மறுமொழியை மனதில் வைத்துத்தான் இப்போது லபோ திபோ என அழுகிறார்.

அபி அப்பா
பெண் பதிவர்களிடம் ஜொள்ளு விடுவதில் யார் முதன்மையானவர் என்று போட்டி வைத்தால் அபி அப்பா - லதானந்த், மங்களூர் சிவா உட்பட பலருக்குள் அடிதடியே நிகழும். அந்தளவுக்கு ஒருவர், மற்றவருக்கு சளைத்தவர்கள் அல்ல. புதிதாக எந்தப் பெண் பதிவர் எழுத வந்தாலும் உடனே சென்று பாராட்டுவது, நட்பை வளர்ப்பது சாட் செய்ய அழைப்பது, பிறகு செக்ஸ் டார்ச்சர் தருவது என அடுத்தடுத்த அஸ்திரங்களை பிரயோகிப்பதில் இவர்கள் அனைவருமே வல்லவர்கள். 'ஆபரேஷன் சல்மா' மூலம் பார்ப்பனரான ஜெயராமனின் முகத்திரையை கிழித்த பதிவர் பாலபாரதிக்கும், மத்திய கிழக்கு நாடுகளில் வேலை பார்க்கும் சென்ஷிக்கும் இது தொடர்பாக நிறைய விஷயங்கள் தெரியும். அவற்றை இவர்கள் இருவரும் எப்போது பொது வெளியில் வைக்கப் போகிறார்கள் என்று அறிய ஆவல்.



மேலே குறிப்பிட்ட ஜொள்ளு பார்ட்டிகளின் நடவடிக்கைகள் சந்தனமுல்லைக்கு நன்றாகவே தெரியும். அதனாலேயே புதிதாக எழுதவரும் பெண் பதிவர்களிடம் சீனியர் என்ற முறையில் இவர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள் என்று சொல்வார். இதை அறிந்த அபிஅப்பாவுக்கு, சந்தனமுல்லை மீது கோபமும் ஆத்திரமும் எப்போதும் உண்டு. அதுதான் இப்போது நர்சிம்மை ஆதரிக்க வைத்திருக்கிறது.



கடந்த ஓராண்டில் மட்டுமே ராப் - சோம்பேறி உட்பட பல பெண் பதிவர்கள், எழுதுவதை நிறுத்தி, வலையுலகைவிட்டே ஒதுங்கியிருக்கிறார்களே... அதற்கு என்ன காரணம்? சுரணையுள்ள ஒவ்வொரு பதிவரும் இதற்கு விடையளிக்க வேண்டும்.



யார் இந்த நர்சிம்?



பிறப்பால் மட்டுமல்ல, சிந்தனையாலும் கடைந்தெடுத்த பிராமணர். இவரது தந்தையார், பிராமண சங்கத்தின் (தாம்ப்ராஸ்) உயர் பொறுப்பில் இருப்பதாக அறிகிறோம். பன்னாட்டு நிறுவம் ஒன்றின் உயரதிகாரியாக பணிபுரியும் நர்சிம், வலைத்தளத்தில் எழுத வந்த புதிதில் யாரும் இவரை சீண்டவில்லை. மறுமொழியும், ஹிட்ஸும் குறைச்சலாக பெற்ற இவர், பிரபல பதிவர்களின் வலைத்தளத்துக்கு சென்று தானாக மறுமொழி இடுவார். எனது வலைத்தளத்துக்கு வாருங்கள் என்று கெஞ்சுவார். அந்த வகையில் ஒவ்வொரு இடுகையை தான் எழுதியதும், சந்தனமுல்லைக்கு லிங்க் அனுப்பியிருக்கிறார். ஆனால், சந்தனமுல்லை அதை உதாசீனப்படுத்தி இருக்கிறார்.



இந்நிலையில்தான் பிரபல பதிவர்களின் அன்பைப் பெற்றால், தன் கடையும் பிரபலமாகும் என்று திட்டமிட்ட நர்சிம், யார் யார் பிரபலமானவர்கள் என லிஸ்ட் எடுத்திருக்கிறார். அதில் தன் சாதியை சேர்ந்த ஜ்யோவ்ராம் சுந்தர், பைத்தியக்காரன் ஆகியோரையும், தன் சாதியாக இல்லாவிட்டாலும் வருணாசிரமத்தை ஏற்கக் கூடிய பிற மேல் சாதியை சேர்ந்த பதிவர்களையும் அணுகி நட்பு பாராட்டி தானாகவே சீடனாகி இருக்கிறார். நன்றாக கவனித்தால் தனது 'குரு'வாக எந்த பிற்படுத்தப்பட்ட சாதியை சேர்ந்தவர்களையும் தலித்துகளையும் இவர் ஏற்கவில்லை என்பது புரியும். அதுமட்டுமல்ல, எந்த பெண் எழுத்தாளரையும் குறைந்தபட்சம் வழிகாட்டியாகக் கூட நர்சிம் ஏற்றதில்லை. அறிவு ஆண்களுக்கு மட்டுமே - அதுவும் பிராமணர்களுக்கு மட்டுமே - சொந்தம் என்பதில் அவ்வளவு நம்பிக்கை!



பணத்தை தின்று, பணத்தில் மலம் துடைத்து, பணத்தில் குளிக்கும் அளவுக்கு செல்வந்தராக இருக்கும் நர்சிம், பணத்தாலேயே தனது 'குரு'க்களை மகிழ்வித்திருக்கிறார். ஒரு பியர் வாங்கிக் கொடுத்தாலே 'இவர் மிகச்சிறந்த இலக்கியவாதி' என்று அறிவிக்கும் சாருநிவேதிதா, 'தனது சீடர்' என மனமுவந்து நர்சிம்மை அறிவிக்கவும், தனது வலைத்தளத்தில் இவருக்கு லிங்க் தரவும் என்ன காரணம்? கள்ளநோட்டிலும் புன்னகைக்கும் காந்திதானே? இந்த இடத்தில் சாருநிவேதிதாவின் இப்போதைய மனைவியும், நர்சிம்மும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதை நினைவில் கொள்க. அதேபோல் இன்று நர்சிம்முக்கு ஆதரவு தரும் யுவகிருஷ்ணா, அதிஷா, இரும்புத்திரை... ஆகியோர் சாருநிவேதிதாவின் அடிவருடிகள் என்பது தற்செயலாக நடப்பவை அல்ல.



எதற்கெடுத்தாலும் சாதியை பார்க்கிறீர்கள்... நர்சிம்மின் எழுத்துக்களை வாசித்திருக்கிறீர்களா? என்ற கேள்வியை ஆதரவாளர்கள் எழுப்பலாம்.



நல்லது நர்சிம்மின் எழுத்துக்கள் எப்படிப்பட்டவை? பொது புத்தியில் உறைந்து போன விஷயங்களை மூன்றாம் தர எழுத்தாளர்களான பட்டுக்கோட்டை பிரபாகர், சுபா, ராஜேஷ்குமார் போல எழுதுவதை தவிர வேறென்ன செய்திருக்கிறார்? இதையும் அவர் திருடித்தான் செய்திருக்கிறார். 'பழைய புத்தகக் கடையில் கிடைக்கும் பேப்பரை பார்த்து காப்பி அடிப்பதாக' மயில் கிண்டலடித்ததற்கு காரணம் இதுதான். இந்த 'உண்மை'யை முதலில் வெளிச்சத்துக்கு கொண்டு வந்தது யார் தெரியுமா? இப்போது நர்சிம்மை ஆதரிக்கும் 'முற்போக்கு' பதிவரான லக்கிலுக் என்கிற யுவகிருஷ்ணாதான்.



ஒருமுறை நர்சிம் ஒரு கதையை எழுதியிருந்தார். அந்தக் கதை மின்னஞ்சலில் வலம் வரும் ஒரு ஆங்கிலக் கதையின் அப்பட்டமான காப்பி என்ற உண்மையை லக்கிலுக் போட்டு உடைத்தார். உடனே என்ன நடந்தது என்று நினைக்கிறீர்கள்? அந்த இடுகையையே தன் தளத்திலிருந்து நர்சிம் தூக்கிவிட்டார்! இப்படித்தான் நர்சிம் கதைகளை எழுதுகிறார். பழைய குமுதம், ஆனந்தவிகடன் இதழ்களில் வெளிவந்த ஒருபக்க, இருபக்க கதைகளை டிங்கரிங் செய்து புனைவாக்குவதுதான் அவர் வேலை.



கம்பரையும், வள்ளுவரையும், குறுந்தொகையையும் தன் தளத்தில் எழுதும் இந்த நர்சிம், ஒருபோதும் எந்த அறிஞரின் விளக்கவுரையிலிருந்து தான் எடுத்திருக்கிறோம் என்று சொல்லியதில்லை. வார்த்தை மாறாமல் அந்த விளக்கவுரையை டைப் செய்து தன் தளத்தில் வெளியிடுவது மட்டுமே இவரது வேலை. இந்த உழைப்புக்கு கிடைத்த பட்டம்தான் 'கார்ப்பரேட் கம்பர்!' வாங்கிய காசுக்கு மேல் கூவுவது என்பது இதுதான்.



எந்தவொரு பொதுப் பிரச்னை குறித்தாவது எப்போதாவது நர்சிம் எழுதியிருக்கிறாரா? ஈழப் பிரச்னை தொடர்பாக 'சோ'த்தனமாக 'தினமலரை' காப்பியடித்து ஒரு இடுகையை எழுதப் போக, பெயரிலி வெளுத்து வாங்க, 'ஐயனே என்னை மன்னித்துவிடுங்கள்' என சரண்டர் ஆன கதை அனைவருக்கும் தெரிந்ததுதானே? நித்தியானந்தா சம்பவத்தின்போது, பிரேமானந்தாவையும் உடன் இணைத்து பதிவு எழுதியவர், ஜெயேந்திரனை ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை. 'அவாள்' பாசம். நிதியானந்தரின் இணையதள பி.ஆர்.ஓ.வாக செயல்பட்ட சாருநிவேதிதாவையாவது கண்டித்தாரா என்றால் அதுவும் இல்லை.



ஆனால், சந்தனமுல்லை தொடர்ந்து பொதுப்பிரச்னைகள் சார்ந்து எழுதிவருகிறார். ஏப்ரல் மாத 'உன்னதம்' இதழில் 'தெலுங்கானா' பிரச்னை குறித்து 'எகனாமிக் அண்ட் பொலிட்டிக்கல் வீக்லி'யில் வந்த கட்டுரையை தமிழாக்கம் செய்தவர், மே மாத 'உன்னதம்' இதழில் 'தலித்துகள் ஏன் நீதிபதியாக வரமுடியவில்லை?' என்ற கட்டுரையை தமிழாக்கம் செய்திருக்கிறார். தன் சொந்த வாழ்க்கை அனுபவத்தின் வழியே சமூக பிரச்னைகளை ஆராய்கிறார். தண்ணீர் தினத்தை முன்னிட்டு 'ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்' நூலை வெகு அழகாக சென்னை கூவம் நதிக்கரையோர அடித்தட்டு மக்களின் வாழ்க்கையோடு ஒப்பிட்டு சந்தனமுல்லை எழுதிய இடுகைக்கு சமமான இடுகையை எப்போதாவது நர்சிம் எழுதியிருக்கிறாரா?



நர்சிம்மின் எந்த இடுகையிலும் சந்தனமுல்லை மறுழொகள் இட்டதில்லை என்பதை நினைவில் கொள்வது நல்லது.

குட் டச் பேட் டச்

தன்னைத்தானே நேசிக்கும், தன் அழகை மட்டுமே ஆராதிக்கும், தன் எழுத்தை தானே வழிபடும் சுயமோகியாக நர்சிம் இருப்பதற்கு ஆகச் சிறந்த உதாரணம், 'குட் டச் பேட் டச்' நிகழ்வு. பதிவுலகம் சார்பில் நடந்த சமூக நிகழ்வில் இதுவும் ஒன்று. கிழக்கு மொட்டை மாடியில் டாக்டர்களான ருத்ரனும், ஷாலினியும் பங்கேற்ற அந்த நிகழ்வுக்கு முழுக்க முழுக்க அடித்தளமிட்டவர் பதிவர் தீபா. சிறுமிகள் மீது நிகழும் வன்கொடுமைகளை கண்டித்து தீபா ஒரு பதிவு எழுத, இது குறித்து அரங்கக் கூட்டம் நடத்தலாம் என பதிவர்கள் மறுமொழியில் சொல்ல... அப்படித்தான் இக்கூட்டம் அரங்கேறியது. பெண் பதிவர்கள்தான் இதற்கான முயற்சியில் இறங்கினார்கள். ஆனால், அப்போது இவர்களுடன் நட்பு பாராட்டிய நர்சிம், தானும் உதவுவதாக சொல்லி களத்தில் இறங்கினார். அவ்வளவுதான். வந்தது வினை. டாக்டர் ருத்ரனுக்கு அழைப்பு செல்லவே இல்லை. அந்தப் பொறுப்பை ஏற்ற நர்சிம், டாக்டரை தொடர்பு கொள்ளவேயில்லை. பதிவுகளில் வந்த அறிவிப்பை பார்த்துவிட்டு டாக்டர் போட்ட பின்னூட்டம் இன்றும் நினைவில் இருக்கிறது. 'யாரும் என்னை முறைப்படி தொடர்பு கொண்டு தேதியை சொல்லவில்லை. இருந்தாலும் பதிவர்களுக்காக நிகழ்ச்சிக்கு வருகிறேன்' என்று பொருள்பட எழுதினார். இதற்கு அடுத்து நடந்த க்ளைமாக்ஸ்தான் முக்கியம்.

இந்நிகழ்வு குறித்து 'ஜூனியர் விகடனில்' செய்தி வெளியிட்ட ரமேஷ் வைத்யா, இந்நிகழ்வு நடக்க முழுக்க முழுக்க நர்சிம்தான் காரணம் என கூலிங் க்ளாஸ் அணிந்த நர்சிம்மின் புகைப்படத்துடன் எழுதியிருந்தார். பிரமாதமாக ஏதோ தானே உழைத்து நிகழ்ச்சியை நடத்தியதுபோல் நர்சிம்மும் பேட்டியளித்திருந்தார். 'ஜூ.வி' வெளிவந்ததும் வழக்கம்போல் 'நன்றி ஜூ.வி' என இடுகை எழுதிய நர்சிம், மறுமொழியில் பல பதிவர்கள் இந்நிகழ்ச்சிக்கு தீபாதான் காரணம் என்று சொன்னதும், அந்த இடுகையையே தூக்கிவிட்டார். ஆக, தான் அம்பலமாகாத இடுகைகளை மட்டுமே நர்சிம் தன் வலைத்தளத்தில் வைத்திருக்கிறார். திருட்டுக் குற்றம் வெளிப்பட்ட இடுகைகளை சத்தமில்லாமல் தூக்கிவிடுவார்.

இந்த நிகழ்வில் சமூகப் பொறுப்புணர்வுள்ள சந்தனமுல்லை தன்னை முன்னிலைப்படுத்தாமல் தீபாவுக்கு உதவினார். எதுவும் செய்யாமல், ஆனால், எல்லாம் தன்னால்தான் என்று சீன் காட்டும் நர்மிம்மை நண்பனாகக் கூட இதன் பிறகு சந்தனமுல்லை மதிக்கவில்லை. ஆக, சந்தனமுல்லை மீது நர்சிம் ஆத்திரப்பட்ட இதுமாதிரியான பல திருட்டுகளே காரணம்.

இந்த அரங்கக் கூட்டம் நடப்பதற்கு இரு நாட்களுக்கு முன்பு தன் வலைத்தளத்தில் பாலபாரதி ஒரு மின்னஞ்சலை வெளியிட்டார். அது ஒரு பெண் பதிவர் அவருக்கு அனுப்பிய பர்சனல் கடிதம். தனக்கு செக்ஸ் டார்ச்சர் தரும் திருமணமான ஒரு ஆண் பதிவரால் தன் குடும்பத்தில் பல குழப்பங்கள் ஏற்படுவதாகவும், அப்படிப்பட்ட பதிவர் எந்த அடிப்படையில் இந்த 'குட் டச் பேட் டச்' நிகழ்ச்சியை நடத்த முயல்கிறார் என்றும் கேட்டிருந்தார். பெயர் குறிப்பிடாமல் பாலபாரதி இந்த மின்னஞ்சலை வெளியிட்டார். அத்துடன் தக்க சமயத்தில் அந்த ஆண் பதிவர் யார் என்று அம்பலப்படுத்துவேன் என்றார். இன்றுவரை பாலபாரதி அந்த ஆண் பதிவரை அம்பலப்படுத்தவில்லை. ஒருவேளை தக்க சமயம் இன்னும் வரவில்லை போல!

தீபா - நர்சிம் - நகைச்சுவை - மயில்

கலாய்த்தல் அல்லது ஒரு பதிவுக்கு நகைச்சுவையாக எதிர்பதிவு எழுதுவது என்பது பதிவுலகில் சகஜம். கண்ணுக்கு தெரிந்த உதாரணம் குசும்பன். நகைச்சுவை என்ற லேபிளின் கீழ், குசும்பன் எது செய்தாலும் பதிவர்கள் அனைவரும் மறுமொழியில் தங்கள் சந்தோஷத்தை தெரிவிப்பார்கள். உண்மையில் எந்தவொரு பிரச்னையையும் நீர்த்துப் போக செய்வதில் இதுமாதிரியான 'குசும்பு' பதிவுகளே முன்னிலை வகிக்கின்றன. அரசர்களின், ஆளும் வர்க்க பிரதிநிதிகளின் அவையில், அவர்களை மகிழ்விக்க கோமாளிகள் நியமிக்கப்படுவார்கள். மக்களின் பிரச்னைகள் அல்லது போராட்டங்கள் அரசரின் செவியை 'எட்டாதபடி' கண்ணும் கருத்துமாக கோமாளி செயல்படுவான்.

இந்த கோமாளி வேடத்தைத்தான் குசும்பன் வலையுலகில் கையில் எடுத்திருக்கிறார். 'மாஸ்டர் ஆஃப் ஆல் சப்ஜெக்ட்' என்று பெயர் வாங்கத் துடிக்கும் நர்சிம், அவ்வப்போது இதுமாதிரியான இடுகைகளை எழுத முயன்றிருக்கிறார். உரையாடல் அமைப்பு சார்பில் சிறுகதைப் பட்டறை நடத்தப்பட்டபோது அது தொடர்பாக ஒரு 'காமெடி' இடுகையை நர்சிம் எழுதியது ஒரு உதாரணம்.

ஆனால், இதே வேலையை முன்பு தீபாவும், இப்போது மயிலும் செய்தபோது நர்சிம் துள்ளி குதித்து விஷத்தை கக்குகிறார். தீபா விஷயத்தில் என்ன நடந்தது?


சுயமோகியான நர்சிம், தனக்கு வந்ததாக ஒரு வாசகர் கடிதத்தை தன் தளத்தில் பிரசுரித்தார். அதில் அவரை இந்திரன், சந்திரன் என்றெல்லாம் புகழப்பட்டிருந்தது. உண்மையிலேயே அப்படியொரு வாசகர் கடிதம் வந்ததா இல்லையா என்பது வேறு விஷயம். படு மொக்கை இடுகைகளை எழுதும் நர்சிம்மையும் மதித்து பாராட்டும் மொக்கைகள் இருக்கிறார்கள் என்றே வைத்துக் கொள்வோம்.


நர்சிம்மின் இந்த வாசகர் கடிதத்தை கிண்டல் செய்து தீபா ஒரு இடுகையை எழுதினார். அந்த இடுகையில் சந்தனமுல்லை மறுமொழி எழுதினார். இப்போது நர்சிம்மை ஆதரிக்கிறார்களே... அவர்களேதான் அப்போதும் தீபாவுக்கு எதிராக பொங்கி எழுந்தார்கள். சந்தனமுல்லைதான் இதற்கெல்லாம் காரணம் என டார்கெட் செய்தார்கள். வலையுலகமே இரண்டு பட்டது.



இந்த பழைய வரலாறுதான் இப்போதும் நடந்திருக்கிறது. அப்போது நர்சிம்முக்கு வந்த வாசகர் கடிதம். இப்போது நர்சிம் அளித்த பேட்டி. இரண்டு இடங்களிலும் நர்சிம்மை கிண்டல் செய்தவர்கள் பெண் பதிவர்கள். இரண்டிலும் அந்த கிண்டலை ஆதரித்து மறுமொழி எழுதியவர் சந்தனமுல்லை.



ஒருவேளை இருமுறையும் நர்சிம்மை கலாய்த்தது ஆண் பதிவர்களாக இருந்தால், கோமாளியான குசும்பனே இதை செய்திருந்தால், என்ன நடந்திருக்கும்? நர்சிம் இதேபோல் பார்ப்பன விஷத்தை கக்குவாரா? நர்சிம்மை ஆதரிக்கும் பதிவர்கள் இதேபோல் எதிர்வினை புரிவார்களா? கலாய்த்தல் என்பதும், கிண்டல் என்பதும் ஆண்களுக்கு மட்டும்தான் சொந்தமா? பெண்கள் அப்படி செய்யக் கூடாதா?



ஆதிமூலகிருஷ்ணன் எடுத்த நர்சிம்மின் பேட்டியை கிண்டல் அடித்து மயில் எழுதிய இடுகையை வரிக்கு வரி ஆமோதிக்கிறோம். பழைய புத்தகக் கடையிலிருந்து திருடித்தான் நர்சிம் பதிவு எழுதுகிறார் என்பது நகைச்சுவை மட்டுமல்ல, உண்மையும் கூட. இதை சந்தனமுல்லை ஆமோதித்து மறுமொழி எழுதியதில் என்ன தவறு இருக்கிறது?



விதூஷ் - டி.ஆர்.அசோக்



எந்தளவுக்கு நர்சிம்மும் அவரது ஆதரவாளர்களும் பார்ப்பன வெறியர்களாக இருக்கிறார்கள் என்பதற்கு சமீபத்திய உதாரணம் டி.ஆர்.அசோக். 'சங்கம்' தொடர்பாக நடந்த கூட்டத்தில் பங்கேற்ற பதிவர் டி.ஆர்.அசோக், பெண் பதிவரான விதூஷை (வித்யா) பார்த்து, 'நீங்கள் அழகாக இருக்கிறீர்கள்...' என்று சொன்னாராம். உடனே நர்சிம் சாமியாடினார் பாருங்கள்... அடேங்கப்பா நினைத்தாலே புல்லரிக்கிறது. 'ஒரு பெண்ணை ஈவ்டீசிங் செய்வதற்கு சமம்... இப்படியெல்லாம் ஆண்கள் இருந்தால் எப்படி பெண்கள் எழுத வருவார்கள்...' என்றெல்லாம் கேள்வி கேட்டார். மறுமொழியிலும் பலர் நர்சிம்மை ஆதரித்து, டி.ஆர்.அசோக்கை எதிர்த்து எழுதினார்கள்.



அப்படியானால் இப்போது சந்தனமுல்லையை குறிவைத்து வன்புணர்ச்சி செய்திருக்கும் நர்சிம்மின் செயல் எப்படிப்பட்டது? இதை ஆராய வேண்டிய அவசியமே இல்லை. விதூஷ் என்கிற வித்யா ஒரு பிராமணப் பெண். அவரது அழகை வர்ணித்த டி.ஆர்.அசோக் பிராமணரல்லாதவர். பார்ப்பன பெண்ணை வேறொரு சாதி ஆண் எப்படி ரசிக்கலாம் என்ற பிராமண இளைஞனின் கோபம்தான் நர்சிம்மிடம் அப்போது வெளிப்பட்டது. மத்தபடி பெண்களை காப்பாற்றும் எந்த புண்ணாக்கு செயலும் இதில் இல்லை. ஒருவேளை டி.ஆர்.அசோக் பிராமணராக இருந்திருந்தால், நர்சிம் இந்த 'கமெண்ட்டை' ரசித்திருப்பார்.



சந்தனமுல்லை மிக பிற்பட்ட வகுப்பை சேர்ந்த பெண். அதனால் நர்சிம் துணிந்து அவரை எழுத்தில் வன்புணர்ச்சி செய்திருக்கிறார். யாரும் அவரை கேள்வி கேட்டமாட்டார்கள் என்ற நம்பிக்கை. நூற்றாண்டுகளாக பிராமணர்களின் இந்த நம்பிக்கைதானே சமுதாய 'இயல்பாக' இருக்கிறது. அதனால்தானே பெண்ணாக இருந்தும் இன்னொரு பெண்ணை தரம் தாழ்த்தி நர்சிம் எழுதியதை இதே விதூஷ் ஆதரிக்கிறார்? சனிக்கிழமை மாலையே விதூஷ் 'பொழுதுபோகலைனா...' என இடுகை எழுத வேறென்ன காரணம் இருக்கமுடியும்?



நர்சிம் செய்த வன்புணர்ச்சி



சந்தனமுல்லை மீது இந்தளவுக்கு கீழ்த்தரமான வசவுகளை நர்சிம் பயன்படுத்தக் காரணம், ஆண் என்ற திமிரும், மேல் சாதிக்காரன் என்ற ஆணவமும்தான். இத்துடன் முதுகெலும்புடன் சந்தனமுல்லை நிமிர்ந்து நிற்பது நர்சிம்முக்கு வயித்தெரிச்சலை கிளப்பியிருக்கிறது. அதனால்தான் சந்தனமுல்லையை குறிவைத்து நர்சிம் எழுதிய 'பூக்காரி' என்ற படுமட்டமான செக்ஸ் கதையில் இந்த //நம்ம வளர்ப்பு வேற மாப்ள.// சொற்பிரயோகம் வருகிறது.



என்ன சொல்ல வருகிறார் நர்சிம்? தன் குலம் பிராமணக் குலம்... தன் வளர்ப்பு மேம்பட்ட வளர்ப்பு



எங்கே போனார் சுகுணா?

வார்த்தைக்கு வார்த்தை பெரியார், முற்போக்கு என்றெல்லாம் ஜல்லியடிக்கும் சுகுணா திவாகர் இந்த விஷயத்தில் இதுவரை வாயே திறக்கவில்லை. சீமாட்டி லீனா மணிமேகலை ஊற்றிக் கொடுக்கும் சரக்குக்காக அவரை ஆதரிக்கும் இந்த அடிவருடி, கோமான் நர்சிம் தி.நகர் 'அருணா பாரில்' அவருக்கு ஊற்றிக் கொடுக்கும் சரக்குக்கு விசுவாசமாகத்தானே நடந்து கொள்வார்? சன் டிவியில் ஒளிபரப்பாகும் மூடநம்பிக்கை தொடரான 'அம்மன்' சீரியலை இயக்குவது அ.மார்க்ஸின் மகள் பாரதிதான். குரு எவ்வழியோ, சீடன் அவ்வழி!



நடுநிலையாளர்களே...
பெண் பதிவர்களே...

தமிழ்மணம் நிர்வாகிக்கு...

இப்போது சொல்லுங்கள், நர்சிம்மை என்ன செய்யலாம்?
--------
அன்பின் சிவராமன் (எ) பைத்தியக்காரன்...

நீங்கள் இப்படித்தானே ஆரம்பிப்பீர்கள்! நல்லவேளையாக ஈரத்துணியைக் கழுத்தில் போட்டு அறுக்கும் கலையை உங்களிடமிருந்து கற்றுக்கொள்ளவில்லை. எவ்வளவு வக்கிரம் இருந்திருந்தால் நான் சரக்கிற்காக விலைபோகிறவன் என்று எழுதியிருப்பீர்கள்? என் மீது சமீபத்தில் கூட பத்வா பிரச்சினை தொடர்பாக விமர்சனம் வைத்த ரோசாவசந்த போன்றவர்கள் இதுமாதிரியான இழிவான குற்றச்சாட்டுகளை முன்வைத்ததில்லை. ஆனால் நீங்கள் வைக்கிறீர்கள் என்றால் என்ன மாதிரியான அடிமன வக்கிரம் உங்களிடம் இருக்க வேண்டும்? லீனாமணிமேகலை எனக்கு சரக்கு ஊற்றிக்கொடுத்ததை உங்களால் நிரூபிக்க முடியுமா சிவராமன்? இதே அருணாபாரில் நர்சிம் தனது நூல் வெளியீட்டுவிழாவை நடத்தியபோது பிரதியைப் பெற்றுக்கொண்டு, குடித்து சிரித்து மகிழ்ந்தீர்களே சிவராமன், நீங்கள் யாருக்கு விலைபோனவன்? ராசேந்திரசோழன் முதல் ராஜசுந்தர்ராஜன் வரை எழுத்தாளர்களைச் சிலாகித்து எழுதுகிறீர்களே, யார் யார் உங்களுக்கு ஊற்றிக்கொடுத்தார்கள் என்று எழுதமுடியுமா? ஆர்குட்டில் வன்னிய ஃபோரத்தில் இணைந்து தன் சுயசாதி அடையாளத்தை உறுதிசெய்கிற சந்தனமுல்லையைப் புரட்சித்தலைவியாகச் சித்தரிக்கிற வினவு பதிவுக்காக உங்களுக்கு அவர் எத்தனை பாட்டில்கள் சப்ளை செய்தார் என்றாவது சொல்ல முடியுமா? ஒரு அரசியல் விமர்சனம் செய்யத் துப்பில்லாமல் ’ஊற்றிக்கொடுத்தாண்டி ஒரு ரவுண்டு’ என்று கிசுகிசு எழுதுவதற்கு என்ன மயிருக்கு பூக்கோ, நீட்ஷே, மார்க்சியம் லெனினியம்?

அ.மா மகள் ’அம்மன்’ சீரியலை இயக்கினாரா இல்லையா என்பது இந்த நிமிடம் வரை எனக்குத் தெரியாது. அப்படியிருந்தால் அதற்குப் பதில் சொல்ல வேண்டியவர்கள் மார்க்சும் அவரது மகளும்தான். ஆனால் ‘நாகவல்லி’ என்னும் மூடநம்பிக்கை தொடருக்கு நீங்கள் வசனம் எழுதியது பதிவுலகமே அறிந்த கதை. அது எப்படி சிவராமன் இந்த மானம், வெட்கம், சுயகூச்சம், குற்றவுணர்ச்சி இதுவெல்லாம் இல்லாமல் மற்றவர்கள் மீது குற்றச்சாட்டுகளைச் சுமத்த முடிகிறது?

பெரியாரியப் பள்ளியிலிருந்து வந்து பெரியாரியத்தைச் சாத்தியப்பட்டவரை வாழ்க்கையில் செயல்படுத்த எத்தனிக்கிற என்னை மாதிரியான ஆட்களுக்கு உங்களிடமிருந்து பார்ப்பன எதிர்ப்பு, ஆணாதிக்கம் குறித்துப் பாடம் கேட்க நேர்வது அவலம்தான். இந்துமதத்தின் அடையாளமாகிய குங்குமத்தை நெற்றியில் அணிந்துகொள்கிற, இன்னும் பூணூலைக் கழற்றாத, தீபாவளி, சித்திரை முதல்நாள் போன்ற பார்ப்பனப் பண்டிகைகளுக்கு நான் உட்பட நண்பர்களுக்குக் குறுஞ்செய்தி வாழ்த்துக்கள் அனுப்புகிற பச்சைப் பார்ப்பான் நீங்கள். அது எப்படி கூச்சமேயில்லாமல் சாதி அடையாளத்தைத் துறப்பது குறித்தும் பார்ப்பன எதிர்ப்பு குறித்தும் உங்களால் எழுத முடிகிறது? இப்படியெல்லாம் யாராவது கேள்வி கேட்டு விடுவார்கள் என்றுதானே, ’’இப்போது நான் பூணல் அணிவதில்லை. சடங்குகள் செய்வதில்லை. மத அடையாள சின்னங்களை பூசிக் கொள்வதில்லை. அதனால் பார்ப்பன சாதியிலிருந்து வெளிவந்துவிட்டேன் என்று சொல்லாதே. புற அடையாளங்களல்ல... அக அடையாளங்களே சாதிக்கான அடித்தளம்” என்று சர்வஜாக்கிரதையாக எழுதுகிறீர்கள். பூணூலையே கழற்றாத உனக்கு எதற்குப் புண்ணாக்குப் பார்ப்பன எதிர்ப்பு?

அவ்வளவு ஏன், டோண்டுராகவன் கூட பார்ப்பனர்களைப் பார்ப்பனர்கள் என்று எழுதுகிறவர். ஆனால் பார்ப்பனர்களைப் ‘பிராமணர்கள்’ என்று எழுதுகிற ’புரச்சிகர’ப் பார்ப்பான் நீங்கள். வினவுக்கு நீங்கள் அனுப்பியிருக்கிற மேற்கண்ட பதிவில் இருக்கிற உங்கள் ‘பிராமணர்களை’ப் பார்ப்பனர்கள் ஆக்கியிருக்கிறார்கள் வினவுத்தோழர்கள். உங்கள் லாஜிக்படியே சில கேள்விகளை முன்வைப்போம்.

‘உரையாடல்’ கலை இலக்கிய அமைப்பை உங்களோடு நடத்துவதற்கு ஒரே ஒரு தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்டவரோ கிடைக்கவில்லையா? ஜ்யோவ்ராம்சுந்தர் என்ற பார்ப்பனர்தான் கிடைத்தாரா? (நிச்சயம் சுந்தர் பைத்தியக்காரனை விட நூறுமடங்கு நேர்மையானவர் என்பதும் பார்ப்பனீயத்தின் மீது விமர்சனம் உடையவர் என்பதும்தான் என் கருத்து. ஆனால் சிவராமனின் ‘லாஜிக்’கிற்காக இதைக் கேட்க வேண்டியிருக்கிறது. சுந்தர் மன்னிக்க வேண்டுகிறேன்.) சினிமா போடுவதற்கு உங்களுக்குப் பத்ரி என்ற பார்ப்பனரின் கிழக்கு மொட்டைமாடிதான் கிடைத்ததா? நீண்டகால வாசிப்பு உடைய யாரும் பாலபாரதி திருநங்கைகள் குறித்து எழுதிய ‘அவன் - அவள்- அது’ நாவலைக் குப்பை என்றுதான் சொல்வார்கள். ஆனால் அதைக் கொண்டாடி பாலபாரதிக்கு உம்மா கொடுக்கிறேன், உப்புமா கொடுக்கிறேன் என்று நீங்கள் எழுதியதற்குப் பாலபாரதி பார்ப்பனர் என்பதுதான் காரணமா?

இந்த லாஜிக் கருமத்தை விட்டுவிடுவோம். ‘உன்னைப் போல் ஒருவன்’ பின்னால் உள்ள முஸ்லீம் விரோத அரசியல் குறித்து நான் பதிவு எழுதியபோது பார்ப்பன குயுக்தியோடு அதைத் திசைதிருப்பும் வகையில் ‘சுகுணா ஆணாதிக்கவாதி’ என்று பதிவுபோட்டீர்கள். (அதை அப்போதே வினவு எதிர்தத்து.) சரி, ‘உமாஷக்திக்கு அரசியல் தெரியாது’ என்று நான் சொன்னது உண்மையிலேயே உங்களுக்குக் கோபத்தை ஏற்படுத்தியிருந்தது என்றால் ‘லீனாவுக்கு அரசியல் தெரியாது’ என்று அய்யனார் எழுதியபோதும் உங்களுக்குக் கோபம் வந்திருக்க வேண்டும். ஆனால் ‘சங்கரராமசுப்பிரமணியன் விக்கிரமாதித்யனைக் காட்டிக்கொடுத்தார்’ என்று சம்பந்தமில்லாமல் ம.க.இ.கவுக்காக ஆஜர் ஆனீர்கள். எவ்வளவு பகைமை இருந்தபோதும் அய்யனாரின் ஆண் திமிரை வினவு அந்த பதிவிலேயே சுட்டிக்காட்டியது. குறைந்தபட்சம் அவர்களுக்கு அரசியல் மனசாட்சி இருந்தது. உங்களுக்கு மனசாட்சியே இல்லையே சிவராமன்? பவுத்தம் வீழ்ந்ததற்குக் காரணம் பார்ப்பனீயமில்லை, பொருளாதாரக் காரணங்கள்தான் என்பது தொடங்கி நீங்கள் எழுதிய பல பதிவுகளில் உள்ள பார்ப்பன மனோபாவத்தை என்னால் சுட்டிக்காட்ட முடியும். எந்த யோக்கியதையில் பார்ப்பன எதிர்ப்பு பற்றிப் பேசுகிறீர்கள் சிவராமன்?

நீங்கள் நர்சிம்மின் ’பார்ப்பனத்திமிர்’ குறித்தோ ஆணாதிக்கத் தடித்தனம் குறித்தோ இதே மொழியில் ஏன் உங்கள் தளத்தில் எழுதவில்லை? அட அரசியல் கருத்துக்களை விடுங்கள், குசும்பனின் பதிவுகளை எத்தனை முறை பின்னூட்டம் போட்டு பாராட்டியிருப்பீர்கள், நர்சிம்மின் பதிவுகளையும் ‘சபாஷ்’ என்று பின்னூட்டமிட்டிருப்பீர்கள். ஆனால் ’வினவு’ பதிவில் ‘நர்சிம் மரணமொக்கைகள் எழுதுபவர்’ என்றும் ‘பற்றியெரியும் புரச்சிகர நெருப்பைக் குசும்பன் ஒண்ணுக்கு அடித்து அணைத்துவிட்டார்’ என்கிற ரீதியில் எழுதுகிறீர்களே, அபிப்பிராயம் சொல்வதிலும் கூட இரட்டை வேடமா, கேவலமாக இல்லையா? சில மாதங்களுக்கு முன்பு ‘பதிவுலகம் முட்டாள்களின் கூடாரம்’ என்று சொல்லி எதிர்ப்புகளைச் சந்தித்தேன். ஆனால் அதையெல்லாம் என்னுடைய அபிப்பிராயமாக முன்வைத்தேனே தவிர, உங்களைப் போல வினவின் வேட்டிக்குப் பின்னால் ஒளிந்து அல்லவே.

எப்போதுமே நீங்கள் இரட்டை வேடம் போடுவதை வெட்டுப்புலி - பிரபாகரன் விமர்சனத்தின்போது நான் சுட்டிக்காட்டினேன். அதைப் பன்மைத்தன்மை, ஆசிரியன் மரணம் என்றெல்லாம் ஜல்லியடித்தீர்களே சிவராமன் (அந்த வன்மம்தான் என்னை ஊற்றிக் கொடுக்கப்படுகிறவனாகச் சித்தரித்ததோ என்னவோ) இந்த அயோக்கியத்தனங்களுக்கும் பெயர் பன்முகத்தன்மைதானா சிவராமன்?

அது எப்படி சிவராமன் நேரில் பார்க்கும்போது ‘நல்லாயிருக்கியாம்மா’ என்று சிரித்து விட்டு, போலிப்பெயரில் ஒளிந்துகொண்டு ‘அடிவருடி, சரக்குக்கு விலைபோகிறவன்’ என்று எழுதமுடிகிறது? ஒரு பார்ப்பனரல்லாத அரசியல் செயற்பாட்டாளரான என்னை இழிவு செய்வதற்குப் பின்னால் உங்கள் பார்ப்பனத் திமிர் இல்லையா சிவராமன்?

பதிவர்களிடம் பழகி, அவர்களின் அந்தரங்க ரகசியங்களைத் தெரிந்து, அதைப் போட்டுக்கொடுத்து ‘புரட்சிகரப் பட்டம்’ வாங்குகிற சிவராமனை என்ன செய்யலாம் என்று பதிவர்கள் முடிவுசெய்து கொள்ளட்டும். எனக்கு இந்த தீர்ப்புகளின் மீது நம்பிக்கை கிடையாது. ஆனால் என்னைப் பொறுத்தவரை, மன்னிக்கவும் சிவராமன், காறித்துப்பக்கூட உங்கள் முகத்தில் விழிக்க விரும்பவில்லை.

அன்பார்ந்த வினவுத் தோழர்களுக்கு...

ம.க.இ.க அமைப்பின் மீது என்னை மாதிரியானவர்களுக்கு இருக்கும் மரியாதையே அது அர்ப்பணிப்பும் நேர்மையும் உள்ள இயக்கம் என்பதுதான். இன்னும் சொல்லப்போனால் நடுத்தரவர்க்கத்தைச் சேர்ந்த பலபேர் உங்கள் அமைப்பை ஆதரிக்கக் காரணமே, ‘அவர்கள் களத்தில் நிற்கிறார்கள், நம்மால் முடியவில்லை’ என்னும் குற்றவுணர்ச்சிதான். சமயங்களில் அதிகப்படியோ என்று தோன்றுமளவுக்கு, வாழ்க்கையில் கொள்கையை நடைமுறைப்படுத்துவதில் பிடிவாதமாய் இருப்பவர்கள் ம.க.இ.க தோழர். ஒரு ம.க.இ.க தோழர் தனது திருமணத்தில் மொய் வாங்கிவிட்டார் என்பதற்காக அவர் மீது அமைப்பு நடவடிக்கை எடுத்த கதையெல்லாம் எனக்குத் தெரியும். ஆனால் தோழர், தன் வாழ்க்கையில் சின்ன அரசியல் பரிசோதனை கூட நிகழ்த்தாத, பச்சைப் பார்ப்பனீயத்தைக் கடைப்பிடித்து வரும் ஒருவரிடம் ‘பார்ப்பன எதிர்ப்பு’ குறித்துப் பதிவு வாங்கிப் போடுவது வெட்கமாக இல்லையா தோழர்? அதுவும் அந்த பதிவை ‘வினவு’ என்று உங்கள் பெயரிலேயே போடுகிறீர்களே, கேவலமாக இல்லையா தோழர்? லீனா பிரச்சினை போன்ற ஒருசில பிரச்சினைகளில் உங்களோடு முரண்பட்டாலும் தொடர்ச்சியாகப் பல சமயங்களில் உங்களை ஆதரித்து எழுதியிருப்பவன் நான். ’வினவு’ என்கிற இணையதளம் உருவாவதற்கு முன்னால் நீங்கள் பேசுகிற பல விஷயங்களை, எந்த கும்பல் துணையுமின்றி, தனியாக எழுதி எதிர்ப்புகளைச் சம்பாதித்தவன். இந்த வலையுலக வரலாறு தெரிய மீண்டும் சிவராமனிடம் சரணடைய வேண்டாம். அசுரன், ராஜாவனஜ் மாதிரியான தோழர்களிடம் கேட்டால் தெரியும். லீனா பிரச்சினைக்குப் பிறகு கூட யோபுராஜ் என்பவர் ’ம.க.இ.க மீது எழுத்தாளர்கள் பகைமையை அறிவிக்க வேண்டும்’ என்று எழுதியபோது கூட, ’இது பாசிச்ச்சிந்தனை’ என்று பின்னூட்டமிட்டவன் நான். இது உங்களிடம் கருணை கோருவதற்காகவோ, என் அரசியல் நேர்மையை நிரூபிப்பதற்காகவோ அல்ல, ஆதரவுச்சக்திகளை எவ்வளவுதூரம் நீங்கள் கேவலப்படுத்துகிறீர்கள், நயவஞ்சர்களிடம் ஏமாந்துபோகிறீர்கள் என்பதைச் சுட்டிக்காட்டத்தான். நர்சிம்மின் ஃபாரின் சரக்கிற்கு விலை போகிறவன் என்றால் இத்தனை ஆண்டுகாலம் பார்ப்பனீயம், இந்துத்துவம் குறித்து எழுதும்போதெல்லாம், ‘அரபிலிருந்து பணம் வருகிறது’ என்று இந்துத்துவவாதிகள் பின்னூட்டம் போடுவார்களே, அதற்கும் உங்களது மனநிலைக்கும் என்ன வித்தியாசம்? நர்சிம்மின் பார்ப்பனத்திமிர், ஆணாதிக்கத் திமிரை அம்பலப்படுத்த உங்களிடம் உண்மையிலேயே சொந்தமாகச் சரக்கு இல்லையா? ஏன் தோழர் அ.மார்க்சின் சிஷயப்பிள்ளை என்று என்னை எழுதுவதற்கு உங்களுக்குப் போயும் போயும் ஜெயமோகனின் சிஷ்யப்பிள்ளைதானா கிடைத்தார்? எப்படியிருந்தபோதிலும் ’லீனாமணிமேகலை எனக்குச் சரக்கு ஊற்றிக்கொடுத்து அடிவருடியாக்கினார்’ என்னும் வரலாற்றுப் பழியிலிருந்து என்னைக் காப்பாற்றிய உங்கள் அன்புக்கு நன்றி தோழர்.

நெகிழ்ச்சியுடன்
சுகுணாதிவாகர்.





Saturday, May 29, 2010

லும்பினியில் புதிய கட்டுரைகள்

தமிழீழப் போராட்டமும் தமிழகமும் - அடுத்து...? - அ.மார்க்ஸ்

நாடு கடந்த தமிழீழ அரசு - ஷோபாசக்தி

இந்த தொழிலதிபருங்க தொல்லை தாங்க முடியலேப்பா! - அசாதி

ஒரு பெட்டைநாயின் கூச்சல் - லீனாமணிமேகலை

அந்தரத்தில் ’தமிழின உணர்வு’ உருவாகுமா? - புதியபோராளி பாஸ்கர்.

மேலும்...

Monday, May 17, 2010

பானுபாரதியின் (நார்வே) “பிறத்தியாள்” கவிதைத்தொகுப்பு விமர்சனம் - கலந்துரையாடல்


நாள் : 20, மே 2010, வியாழன் மாலை 6 மணி

இடம்: தேவநேயப்பாவாணர் அரங்கு ( LLA)
அண்ணா சாலை, சென்னை - 2.

பங்கேற்போர் :

வ.கீதா
அ.வெண்ணிலா
பிரபஞ்சன்
மதிவண்ணன்
சுகுணா திவாகர்
யாழினி முனுசாமி
கவின் மலர்
அமுதா

அன்புடன் அழைக்கும்
கருப்புப் பிரதிகள்

தொடர்புக்கு : 9444272500