Thursday, March 8, 2012

ஒரு பெண்ணைக் கொலை செய்தோம்!

சுகுணா திவாகர்
ஓவியங்கள் : இளையராஜா, சிவபாலன்

''எங்க வீட்டுக்கு நீங்கதான் போன் பண்ணீங்களா?''

கார்த்திகா என்னைப் பார்த்துத்தான் அந்தக் கேள்வியைக் கேட்டாள். தேகம் முழுக்கக் கருகியிருந்த சருமப் பொசுங்கல்களுக்கு நடுவில் அவளது கண்கள் மட்டும் வெள்ளையாக அலைபாய்ந்தன.

ஜீவா மூலம்தான் கார்த்திகா எங்களிடம் வந்து சேர்ந்தாள். நாங்கள் நவீன இலக்கியம், அரசியல் பேசித் திரிந்து டீமாக மாறியவர்கள். டீம் என்றால் அது ஒன்றும் அவ்வளவு பெரிய டீம் இல்லை. நான், ஜீவா, அக்தர் உசேன், என் பெயர் கொண்ட இன்னொரு செந்தில் என்கிற கவிஞர் நவயுகன்... அவ்வளவுதான். ஓஷோ, பாலகுமாரன் என்று அலைந்து திரிந்து, ஒரு வழியாக எங்கள் இலக்கிய டீமில் வந்து இணைந்த பிறகும் ஜீவா ஒரு சாகசக்காரனாகவும் அப்பாவியாகவும் இருந்தான். இப்போது நினைத்தால் அது ஒரு வரம் என்றுதான் தோன்றுகிறது. முதல் குடி, முதல் சிகரெட்டை எங்கள் டீமுக்கு அறிமுகப்படுத்திய அவனுக்குப் பெண் நண்பிகள் கணிசம். எங்களுக்கு அது மருந்துக்கும் இல்லை. தங்கையின் திருமணத்தில் துணிச்சலாகக் குடித்துவிட்டு பந்தி பரிமாறியது, வீட்டு மொட்டை மாடியில் சிகரெட் குடித்தது, பக்கத்து வீட்டுப் பெண் கொடுத்த காதல் கடிதங்கள் எனக் கதைகதையாகச் சொல்வான். ஆனால், கார்த்திகாவின் கதை, ஜீவாவின் வழக்கமான சாகசக் கதைகளில் ஒன்று அல்ல. அது ஒரு துயரக் கதையாகவும் இன்னொருபுறம் நாங்கள் பேசிக்கொண்டு இருந்த விஷயங்களுக்குச் சவால்விடும் கதையாகவும் இருந்தது!

''அப்பாவை ரயில் ஏத்தப் போனப்போதான் இந்தப் பொண்ணைப் பார்த்தேன். அழுதுக்கிட்டு இருந்தது. சாகற முயற்சியில இருந்தது!'' என்றான் ஜீவா. அவன்தான் பேசிக்கொண்டே இருந்தான். கார்த்திகா ஒன்றும் பேசவில்லை. இறுதி வரை அப்படித்தான். நான் மெள்ள அவளை ஏறிட்டுப் பார்த்தேன். பூசினாற்போன்ற கறுத்த தேகம். அவள் கண்கள் மட்டும் வசீகரமாக இருந்தன. ''கறுத்த பெண்களுக்கு அப்படித்தான். கண்ணு அழகாகத் தெரியும். முகம் கறுப்பா இருக்கும்போது கண்ணு மட்டும் வெள்ளையா இருந்தா தனி அழகுதான்!'' என்பான் அக்தர்.

பத்தாம் வகுப்புத் தேர்வை இரண்டொரு முறை எழுதித் தேர்வாகாததால் வீட்டிலேயே இருந்துவிட்டாள் கார்த்திகா. அப்பா அரசு மருத்துவமனையின் கடைநிலை ஊழியர். அக்கா நர்ஸ். மருத்துவமனை குவார்ட்டர்ஸில் வசித்தார்கள். அதே குவார்ட்டர்ஸில் வசித்த, கல்லூரி முதலாம் ஆண்டு படித்துக்கொண்டு இருந்த பையனுக்கும் கார்த்திகாவுக்கும் காதல். இருவரும் வீட்டைவிட்டு ஓடிப்போனார்கள். மதுரையில் விடுதி ஒன்றில் அறை எடுத்துத் தங்கியிருக்கிறார்கள். காதல், கல்யாணத்தைவிட அவனுக்கு கார்த்திகாவின் தேகம் மீதுதான் ஆர்வம். அவளுக்கோ காதல் என்பது உடலுக்கெல்லாம் அப்பாற்பட்ட, நறுமணம் வீசிக்கொண்டே அந்தரத்தில் மிதக்கும் ஏதோ ஒரு பரிசுத்தமான வஸ்து என்கிற எண்ணம். மீண்டும் மீண்டும் அவன் முயற்சிகள் தொடர, அவனிடம் சொல்லாமல்கொள்ளாமல் மதுரை யில் இருந்து பஸ் ஏறி வீட்டுக்கு ஓடிப்போனாள் கார்த்திகா!

வீடு அவளை ஏற்றுக்கொண்டாலும் அது இயல்பானதாக அமையவில்லை. வசவுகள், சந்தேகங்கள் என நாளும் ஒரு விஷப்பூச்சி கார்த்திகாவைத் தீண்டத் தொடங்கியது. குறிப்பாக, அவள் பைப்பில் தண்ணீர் பிடிக்கும் சமயங்களில் அந்த குவார்ட்டர்ஸ் பையன்கள் கார்த்திகாவை ஏகத்துக்கும் கிண்டல் அடித்துச் சீண்டி இருக்கிறார்கள். 'கார்த்திகா என்பவள் எப்போதும் எந்தப் பையனோடும் ஓடிப்போகத் தயாரானவள்’ என்கிற பிம்பமே அவர்களுக்குள் ஊறிப்போய் இருந்தது. வீட்டின் வசவுகள், வீட்டைச் சுற்றியான வசவுகள் அவளை ரயில் தண்டவாளங்களை நோக்கித் துரத்தியிருந்தன.

''சரிடா, நாம என்ன பண்ண முடியும்?'' என்றான் அக்தர். உண்மைதான். கார்த்திகாவை நடத்துகிற அளவுக்கு எங்கள் வீடு எங்களை மோசமாக நடத்தாவிட்டாலும், அப்படி ஒன்றும் கௌரவமாகவும் நடத்தவில்லை. அமெரிக்க வேலை, ஐ.டி., ஐந்து இலக்கச் சம்பளத்தோடு எங்கள் செட் பசங்கள் செட்டிலாகிவிட, நாங்களோ நிறப்பிரிகை, கோபிகிருஷ்ணன், மிஷல் ஃபூக்கோ என்றிருந்தோம். வீடு எங்களை அனுமதித்ததே பெருந்தன்மையாக இருக்க, கார்த்திகாவை எங்கே கூட்டிப்போவது? அப்போதுதான் தோழர் கேசவனும் ரத்னா தோழரும் நினைவுக்கு வந்தார்கள்.

தோழர்கள் கேசவனும் ரத்னாவும் சேர்ந்து வாழ்ந்துகொண்டு இருந்தார்கள். பெண்ணியத்தின் மீது இருவருக்கும் அபார நம்பிக்கை. ரத்னா தோழர் கிராப் வெட்டி எப்போதும் பேன்ட் சட்டைதான் அணிந்து இருப்பார். காது, மூக்கு, கழுத்து என்று எங்கும் நகை கிடையாது. 'தங்கம் என்பது மஞ்சள் பிசாசு!’ என்பார். தோழர் கேசவன் எங்களுக்கு உதாரணப் பெண்ணியவாதி. மகள் கிளாரா ஜெட்கின் பிறந்த பிறகு அவரே ஆண் கருத்தடை செய்துகொண்டார். வீட்டு வேலைகளை அவர் பகிர்ந்துகொண்டது அவர்கள் குடியிருந்த 'ஸ்டோர்’ஸில் பெண்களின் பிரதான குசுகுசுப் பேச்சாக மாறி இருந்தது. எப்போது தோழர் கேசவனை நினைத்தாலும் கைலியை ஒருக்களித்து வாசலில் அமர்ந்து பாத்திரம் துலக்கிக்கொண்டு இருப்பதான சித்திரமே தோன்றும்.

ல்லோருக்கும் தோசை சுட்டுக்கொண்டுவந்து தந்தார் கேசவன். ரத்னா தோழர்தான் பரிவாக கார்த்திகாவிடம் விசாரித்துக்கொண்டு இருந்தார்.

''உங்க அப்பா மேல கேஸ் கொடுக்கலாமா?''

''வேணாம்க்கா.''

''அந்தப் பையன் மேல?''

''ஐயோ, வேணாம்க்கா.''

இப்படி ஒன்றிரண்டு வார்த்தைகள் பேசுபவளாகத்தான் இருந்தாள் கார்த்திகா. அனேகமாக ஜீவாவோடுதான் அதிகம் பேசியிருப்பாளாயிருக்கும். வீட்டுச் சுவர் முழுக்க மாட்டப்பட்டு இருந்த தலைவர்கள், போராளிகளின் புகைப்படங்கள், புத்தகங்கள், துண்டுப் பிரசுரங்கள் அவளது மிரட்சியை அதிகப்படுத்தி இருக்கும் என்று நினைக்கிறேன். ஆனால், ஓயாது பேசி கிளாரா மட்டும் அவளுக்குக் கொஞ்சம் நெருக்கமாகி இருந்தாள். கார்த்திகா கிளாராவுக்குச் சில கதைகளையும் ரைம்ஸ்களையும் சொல்லிக்கொடுத்ததைப் பார்த்தபோது, அவள் இயல்புநிலைக்கு வந்துவிட்டாள் என்று திருப்தி அடைந்தோம். ''பேசிக்கிட்டு இருங்க... வந்துடறேன்!'' என்றவாறு பேன்ட் மாட்டி வெளியே கிளம்பினார் கேசவன்.

ரு மணி நேரம் கழிந்திருக்கும். கார்த்திகா டி.வி-யில் நகைச்சுவைக் காட்சி ஒன்றைப் பார்த்துக்கொண்டு இருந்தாள். கிளாரா தூங்கியிருந்தாள். கேசவன் இரண்டு ஆண் களோடு உள்ளே நுழைந்தார். அவர்களில் தலை நரைத்த மனிதரின் கண்களில் அதிர்ச்சி அப்பியிருந்தது. இன்னோர் இளைஞனின் கண்களில் ஆத்திரம் உறைந்து இருந்தது. உள்ளே நுழைந்ததும் கார்த்திகாவை அடிக்கத் தொடங்கினான் அந்த இளைஞன். ''ஓடுகாலி நாயே... ஏண்டி மானத்தை வாங்கறே?'' என்று இரண்டொரு முறை சொல்லிக்கொண்டவனாக மீண்டும் மீண்டும் அடிக்கத் தொடங்கினான். எங்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஒரு வார்த்தைகூடப் பேசாமல் கார்த்திகா அடிகளை ஏற்றுக்கொண்டு இருந்தாள். ''என்னங்க நீங்க..? ஒரு பொம்பளைப் புள்ளைய... அதுவும் இன்னொருத்தர் வீட்லவெச்சு அடிக்கிறீங்க?'' என்று கோபத்துடன் குரலை உயர்த்தித் தடுத்தார் தோழர் கேசவன். அந்த அளவில் அவர் ஒரு பெண்ணியவாதியாக இருந்தார்!

அப்பாவோடும் அண்ணனோ டும் கிளம்பும்போது கார்த்திகா, ஜீவாவையும் கிளாராவையும் மட்டும் ஏறிட்டுப் பார்த்தவளா கக் கிளம்பிப் போனாள்.

ரண்டு மாதங்கள் கழிந்துஇருக்கும். கார்த்திகாவை நாங்கள் மறந்திருந்த நேரம். மீண்டும் கார்த்திகாவோடு வந்து சேர்ந்தான் ஜீவா. அவனது அலுவலகத்துக்கே நேரே போயிருக்கிறாள் அவள். எந்தப் பெண் அறிமுகமானாலும் தன் தொலைபேசி எண், அலுவலக முகவரி, மின் அஞ்சல் முகவரி என்று எல்லாவற் றையும் அளித்துவிடுவான் ஜீவா. இப்போது எனக்கு கார்த்திகாவின் மீது பரிதாபம் வரவில்லை. ஆத்திரம்தான் வந்தது. அவளைவிட ஜீவாவின் மீதுதான் எரிச்சல் அதிகமாக வந்தது.

''இதுக்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லைடா. இந்தப் பிரச்னையை நீயாத்தான் சால்வ் பண்ணணும்!'' என்றேன் குரலை உயர்த்தி. ஜீவா மௌனமாக நின்றான். கார்த்திகா இப்போதும் எங்களை நேருக்கு நேர் பார்க்கவில்லை. ஆனால், அவள் முகத்தில் சின்ன சுணக்கம் தெரிந்தது.

''ராகவன்கிட்ட போவோம்டா!'' என்றான் இன்னொரு செந்தில்.

ராகவனும் தோழர்தான். முன்னாள் தோழர் என்றும் சொல்லலாம். ஒரு கம்யூனிஸ்ட் கட்சியில் இயங்கிக்கொண்டு இருந்தவர், 'கட்சியில் ஜனநாயகம் இல்லை’ என்று வெளியேறியவர். ஒரு சின்ன

டெலிபோன் பூத் வைத்திருந்தார். எங்க ளுக்கு வார இறுதியில் குடிப்பதற்கும் இலக்கிய உரையாடல்களை நடத்துவதற்கும் அதுதான் களம். போன் அடித்த இருபதாவது நிமிடம் களத்துக்கு வந்தார் ராகவன். கண்ணாடியை மூக்குத்தண்டில் அழுத்திக்கொண்டே, ''பொண்ணு ரொம்பச் சின்னப் பொண்ணா இருக்கே?'' என்றார்.

''ஆமாம்'' என்றேன்.

லேசாக கார்த்திகாவைப் பார்த்துப் புன்னகைத்தார். கார்த்திகாவும் புன்னகைத்ததாகத்தான் தோன்றி யது. ஒரு பழச்சாறுக் கடையில் ஐந்து பேரும் அமர்ந்திருந்தோம். ஆளுக்கு ஒரு ஜூஸ் ஆர்டர் கொடுத்துவிட்டு, எங்களிடம் எல்லா விவரங்களையும் கேட்டுக் கொண்டார். ''ஏதாவது ஹாஸ்டல்ல சேர்க்கலாம். ஆனா, அதுக்கான காசு கட்டணும். என்ன பண்றது?'' என்றார். யாருக்குத் தெரியும்? அவர் ஏதாவது தீர்வைச் சொல்லி விடுவார் என்பதைப் போல, மூவரும் அவர் முகத்தையே பார்த்துக்கொண்டு இருந்தோம்.

''ம்ம்ம்... மொத தடவை யாராவது கட்டிட்டாக்கூட, மாசா மாசம் ஃபீஸ் கட்டணும். அதுபோக, இந்தப் பொண்ணோட செலவுக்குப் பணம்?'' - ஆக, இந்தப் பிரச்னையில் ஏராளமான கேள்விகள் இருக்கின்றன, அதுவும் பதில் தெரியாத கேள்விகள், மேலும், கேள்விகள் மட்டுமே இருக்கின்றன என்பது எங்களுக்குக் கொஞ்சம் கொஞ்சமாக விளங்கத் தொடங்கியது. இருப்பதிலேயே அதிகமாகக் குழம்பிப்போனவன் ஜீவாதான். 'அதுக்குத்தான் மொதல்லயே சொன்னேனே’ என்கிற ஒரு சின்ன சந்தோஷப் புன்னகையும் தொனியும் எனக்கு வரத் தொடங்கியிருந்தது. கஷ்டப்பட்டு அடக்கிக்கொண்டேன்.

''சரி, என்ன படிச்சிருக்கு?'' - ராகவன் கேட்டார்.

''டென்த் ஃபெயில். மூணு அட்டெம்ப்ட்!''

சலிப்புத் தட்டியது ராகவனின் கண்களில். ''ப்ளஸ் டூ முடிச்சிருந்தாக் கூட எங்கேயாவது வேலைக்குச் சேர்த்துவிடலாம்!''

டைப்பிங், கம்ப்யூட்டர் என்று எதுவும் கார்த்திகாவுக்குத் தெரிந்திருக்க வில்லை. ஐந்து பழச்சாறுகளுக்கான பணத்தைத் தந்தவர், ''ஒரு வேலை இருக்கு... பத்து நிமிஷத்துல வந்துடறேன். அங்கே இங்கே அலைய வேணாம். ஏதாவது ஒரு இடத்துல இருங்க!'' என்று சொல்லிக் கிளம்பிப் போனார்.

ஒரு மணி நேரத்துக்கு மேலாகி இருக்கும். ராகவன் வருவதாகத் தெரியவில்லை. போனும் வந்தபாடு இல்லை. ஜீவாவின் முகத்தில் கலவரம் கூடிக்கொண்டுபோனது. நான்கைந்து முறை மாற்றி மாற்றி ராகவனுக்கு போன் போட்டுப் பார்த்தோம். தோழர் எடுப்பதாக இல்லை. இரண்டு மணி நேரத்துக்குப் பிறகு, அவரிடம் இருந்து போன் வந்தது. உடனடியாக கார்த்திகா வைக் கூட்டிக்கொண்டு வரச் சொன்னார்.

நாங்கள் போனபோது ராகவனுடன் கார்த்திகாவின் அப்பாவும் அண்ணனும் நின்றிருந்தார்கள். ஜீவாவிடம் பேசி எப்படியோ கார்த்திகா அப்பாவின் தொலைபேசி எண்ணை வாங்கியிருக்கிறார் ராகவன். இப்போது கார்த்திகா அப்பாவின் கண்களில் அதிர்ச்சிக்குப் பதிலாக அலுப்பும் சலிப்பும்தான் தெரிந்தன. எங்களை லேசாக முறைத்தவாறு நின்றான் அவள் அண்ணன். தீயணைப்பு நிலையத்தின் அருகில் கார்த்திகாவை அவள் அப்பாவுடனும் அண்ணனுடனும் இன்னொரு முறை அனுப்பிவைத்தோம். இப்போது அவள் ஜீவாவைக்கூட ஏறிட்டுப் பார்க்கவில்லை.

மூன்று வாரங்கள் தாண்டியிருக்காது. கார்த்திகா தீக்குளித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி வந்தது. நானும் ஜீவாவும் போயிருந்தோம். கார்த்திகாவுக்குப் பக்கத்தில் அவளது அம்மா கவலையும் கண்ணீருமாக அமர்ந்து இருந்தார். அக்கா வெளியில் போயிருக்கிறாராம். அப்பாவை யும் அண்ணனையும் காணவில்லை.

''எங்க வீட்டுக்கு நீங்கதான் போன் பண்ணீங்களா?''

இப்போதுதான், இந்தக் கேள்வியைக் கேட்கும்போதுதான் கார்த்திகா முழுதாக என் கண்களை நேருக்கு நேர் பார்த்தவளாகக் கேட்டாள். இல்லை, நான் அவள் வீட்டுக்கு போன் செய்யவில்லை. இன்னொரு செந்தில்தான் போன் செய்திருக்கிறான் என்பது பின்னாளில் தெரிந்தது. அவனுக்கும் இது வரை எந்தப் பெண் தோழியும் வாய்த்தது இல்லை. நட்பை உருவாக்கிக்கொள்வதன் நிமித்தம்தான், கார்த்திகாவிடம் பேசுவதற்காக போன் செய்திருக்கிறான். ஆனால், போனை எடுத்தது அவளது அக்கா. அதன் பின் வசவுகளும் சந்தேகங்களுமாக விஷப் பூச்சிகள் மேலும் மேலும் ஊரத் தொடங்கி இருக்கின்றன. அனேகமாக அவள் கண்களுக்கு அருகில் அந்தப் பூச்சிகள் வந்தபோதுதான், கார்த்திகா தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்து இருக்க வேண்டும்.

கார்த்திகா இறந்த செய்தி எங்களுக்குத் தாமதமாகத்தான் வந்து சேர்ந்தது. அன்று இரவு நானும் ஜீவாவும் நிறைபோதையில் இருந்தோம். ஜீவாவுக்கு அழுகை தாங்க முடியவில்லை. ''ஏன் இப்படிப் பண்ணணும் கார்த்திகா?'' என்றான் அழுகையினூடாக. வார்த்தைகள் துண்டுதுண்டாகத்தான் வந்து விழுந்தன.

உண்மையில் ஜீவா மட்டும் அப்பாவி சாகசக்காரன் இல்லை. கேசவன், ரத்னா, ராகவன் என எல்லோருமே ஏதோ ஒரு வகையிலான அப்பாவி சாகசக்காரர்கள்தான். அவர்களை ஏன் குறை சொல்ல வேண்டும்? நான், அக்தர், செந்தில் என எல்லோரும்தான். வீடு மறுக்கிற ஒன்றை, வீடு விரும்பாத ஒன்றைச் செய்துகொண்டு இருக்கிற சாகசமும், மற்றவர்களிடம் இருந்து எங்களை வித்தியாசப்படுத்திக்கொள்கிற வேட்கையும்தான் நாங்கள். ஆனால், முகத்தில் அறையும் நிஜமான கேள்விகளுக்கு எங்களால் எந்தப் பதிலையும் அளிக்க முடியவில்லை. ஜீவா, நான், அக்தர், நவயுகன், கேசவன், ரத்னா, ராகவன் என சாகசக்காரர்கள் எல்லாம் சேர்ந்து ஒரு பெண்ணைக் கொலை செய்திருக்கிறோம்.

''வீட்டைவிட்டு ஓடிப்போறது, தற்கொலை செஞ்சுக்கிறது - இந்த ரெண்டு எண்ணமும் எல்லார் வாழ்க்கையிலும் ஒருமுறையாவது வந்துட்டுப் போறதுதான். ஆனா, கார்த்திகாவால் முதல் வாய்ப்பை வெற்றிகரமா நிறை வேத்த முடியலை. அதான் ரெண்டாவது வாய்ப்பைத் தேர்ந்தெடுத்துட்டா.

ஆண்களால்தான் வீட்டைவிட்டு ஓடிப் போகவும் முடியும்... தற்கொலை பண்ணிக்கவும் முடியும். பொம்பளைங்களால தற்கொலை மட்டும்தான் பண்ணிக்க முடியும். ஏன்னா, ஒரு பொண்ணு வீட்டைவிட்டு ஓடிப்போறதா இருந்தாக்கூட, அவ இன்னொரு ஆம்பளையோடுதான் ஓடிப் போக முடியும்!''

இதைச் சொல்லும்போது நான் ஜீவாவின் முகத்தை ஏறிட்டுப் பார்க்கவில்லை!

(நன்றி : ஆனந்த விகடன்)

Thursday, October 13, 2011

மண்ணுக்கான விடுதலை அல்ல... மக்களுக்கான விடுதலையே தேவை!



ரீ.சிவக்குமார்
படங்கள் : க.தனசேகரன்

ன வெறி, சாதி வெறி இரண்டுக்கும் எதிரான போராட்டங்களின் குறியீட்டுப் பெயர்தான் கொளத்தூர் மணி. உள்ளூர்ச் சேரிகளில் தீண்டாமை திணிக்கப்பட்டு, ஒதுக்கப்பட்ட தமிழர்களுக்கும் ஈழத்து முள்வேலிகளில் அடைக்கப்பட்ட தமிழர்களுக்கும் சற்றும் சமரசம் இன்றிக் குரல் கொடுப்பவர். மூன்று தமிழர்களின் உயிர் காக்க மரண தண்டனை எதிர்ப்புப் பிரசாரப் பயணத்தில் இருந்தவரைச் சந்தித்தேன்.

''நீங்கள் பெரியார் கொள்கைகள்பால் எப்படி ஈர்க்கப்பட்டீர்கள்?''

''கொளத்தூர் நிர்மலா உயர்நிலைப் பள்ளியில் படித்துக்கொண்டு இருந்தபோது, புலவர் வ.வேணுகோபால் என்ற தமிழ் ஆசிரியர்தான் எனக்கு முதன்முதலில் பகுத்தறிவுச் சிந்தனைகளை அறிமுகப்படுத்தினார். வகுப்பறையில் புராணக் கதைகள் குறித்து அவ்வப்போது விமர்சனங்களை முன் வைப்பார். 'புராணம் என்றால் பழமை, நவீனம் என்றால் புதுமை. புராணக் கதை என்றால் பழைய பொய்’ என்று சொன்ன அவர், 'விடுதலையில் தீபாவளிபற்றி ஒரு கதை வந்திருக்கிறது. படியுங்கள்’ என்றார். அப்போதுதான் முதல்முதலாக விடுதலை இதழைப் படித்தேன். கொஞ்சம் கொஞ்ச மாகப் பெரியாரின் கருத்துகள் என்னை ஈர்த்தன. 1962-ல் அப்போதைய மக்கள வைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்துப் பேசுவதற்காக பெரியார் எங்கள் ஊருக்கு வந்தார். அப்போது பெரியாரின் பேச்சை முழுமையாக உள் வாங்கிக்கொண்டேன் என்று சொல்ல முடியாது. 1971-ல் கொளத்தூரில் பெரியாரை வைத்து பொதுக் கூட்டம் நடத்தியதில் இருந்து என் இயக்கச் செயல்பாடுகள் தொடங்கின.''

''ஒரு பெரியாரிஸ்ட் என்ற முறையில் இன்றைய சூழலில் பெரியாரிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டியவை, விட்டுவிட வேண்டியவை என்று எவற்றைக் கருதுகிறீர்கள்?''

''சாதி ஒழிப்பும் பெண் விடுதலையும்தான் பெரியார் கொள்கைகளின் அடித்தளம். அவரது கடவுள் மறுப்பும் தனித் தமிழ்நாடு கோரிக்கையும்கூட, சாதி ஒழிப்புக் கொள்கை யின் நீட்சிதான். நான் மட்டும் அல்ல, இந்த மானிட சமுதாயமே பெரியாரிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டியது சுய மரியாதையையும் சமத்துவத்தையும்தான். பெரியாரிடம் இருந்து விட்டுவிட வேண்டியது என்று எதுவும் இல்லை. ஆனால், பெரியார் இறந்து 38 ஆண்டுகள் ஆகிவிட்டன. சுற்றுச்சூழல் பாதுகாப்பு, அணு உலை எதிர்ப்பு போன்ற விஷயங்கள் பெரியார் காலத்தில் இல்லை. இப்போது அதை எல்லாம் சேர்த்துப் பேச வேண்டும். மேலும், உலகின் தலைசிறந்த பெண் விடுதலைக் கருத்துகளைச் சொன்னவர் பெரியார். இப்போது பெண் விடுதலை என்பதைத் தாண்டி திருநங்கைகளின் உரிமைபற்றிப் பேசப்படுகிறது. அதேபோல், ஒருகாலத்தில் 'எதை முதன்மைப்படுத்துவது சாதியையா... வர்க்கத்தையா?’ என்கிற கருத்துப் போராட் டம் பெரியார் இயக்கத்துக்கும் கம்யூனிஸ்ட் டுகளுக்கும் இடையே இருந்துவந்தது. ஆனால், சில பத்தாண்டுகளாக கம்யூ னிஸ்ட்டுகள் இந்துத்துவ எதிர்ப்பை முன் வைக்கிறார்கள்; தீண்டாமைப் பிரச்னை களைக் கையில் எடுத்துப் போராடுகிறார் கள். இது பெரியாரியலுக்குக் கிடைத்த வெற்றி. ஆனால், கம்யூனிஸ்ட்டுகள் எப்படி சாதிப் பிரச்னைகளைக் கணக்கில் எடுத்துக்கொள்ளத் தவறினார்களோ, அதேபோல பெரியாருக்குப் பின் பெரியார் இயக்கங்கள் பொதுவுடைமையை அழுத்தமாகப் பேசவில்லை. இன்றைய உலகமயமாக்கச் சூழலில் 'பார்ப்பன - இந்திய தேசிய - பன்னாட்டு கூட்டுக் கொள்ளை எதிர்ப்பு’ என்ற முழக்கத்தை நாங்கள் முன்வைக்கிறோம்.''

'' 'திராவிட அரசியல்தான் இன்றைய பல வீழ்ச்சிகளுக்குக் காரணம். திராவிடம் என்பதே மாயை’ என்று தொடர்ச்சியாக தமிழ் தேசியவாதிகள் பேசிவருகிறார்களே... இன்னும் திராவிட அடையாளத்தைச் சுமக்கத்தான் வேண்டுமா?''

''போதிய புரிதல் இல்லாதவர்கள்தான் அப்படிப் பேசிவருகிறார்கள். மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பிறகு, பெரியார் சாகும் வரை 'தமிழ்நாடு தமிழருக்கே’ என்று தனித் தமிழ்நாடு கோரிக்கையைத்தான் முன்வைத்தாரே தவிர, மலையாளிகள், தெலுங்கர்கள், கன்னடர்களைச் சேர்த்து திராவிட நாடு விடுதலையை முன்வைக்கவில்லை. திராவிடம் என்பது ஏதோ நிலப்பரப்புக்கான அடையாளம் இல்லை. அது இந்துத்துவ எதிர்ப்பின் குறியீட்டுச் சொல். நாங்களும் தனித் தமிழ்நாடு கேட்கிறோம், தமிழ் தேசியவாதிகளும் தனித் தமிழ்நாடு கேட்கிறார்கள். ஆனால், அவர்கள் வெறுமனே மண்ணுக்கான விடுதலையை முன்வைக்கிறார்கள். நாங்கள் மக்களுக்கான விடுதலையை முன்வைக்கிறோம். 'திராவிடர்’ என்ற சொல், பார்ப்பனர் அல்லாத மக்கள் என்ற பொருளில்தான் பெரியாரால் பயன்படுத்தப்பட்டது. திராவிட அரசியல் கட்சிகளின் மீது உள்ள வெறுப்பால் பலர் 'திராவிடம் என்பதே மாயை’ என்று பேசிவருகிறார்கள். உண்மையில் திராவிட அரசியல் கட்சிகளான தி.மு.க., அ.தி.மு.க., ம.தி.மு.க.கூட தமிழர்களிடத்தில்தான் அரசியல் செய்கின்றனவே தவிர, மலையாளி கள், தெலுங்கர்கள், கன்னடர்களிடத்தில் அல்ல. மேலும், சாதி ஒழிப்பு, தாழ்த்தப் பட்டோர் விடுதலை, பார்ப்பன எதிர்ப்பு, இந்துத்துவ எதிர்ப்பு, இந்திய தேசிய எதிர்ப்பு, பெண் விடுதலை... இவை எல்லாம் சேர்ந்ததுதான் பெரியார் முன்வைத்த திராவிட அரசியல். இன்றைய திராவிட அரசியல் கட்சிகள், இவை எதையும் முன்வைப்பது இல்லை. எனவே, திராவிட அரசியல் கட்சிகளை முன்வைத்து திராவிடம் என்கிற கருத்தாக்கத்தையே மறுப்பது அறியாமை.''

''தொடர்ச்சியாக தீண்டாமைக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுக்கிறீர்கள். ஆனால், 'பெரியார் கேரளாவில் நடத்திய வைக்கம் போராட்டம் தவிர, தமிழகத்தில் தீண்டாமைப் பிரச்னைகளுக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுத்தது இல்லை’ என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றதே?''

''தீண்டாமை ஒழிய வேண்டும் என்றால், சாதி ஒழிய வேண்டும்; சாதி ஒழிய வேண்டும் என்றால், இந்து மதம் ஒழிய வேண்டும். இதுதான் பெரியாரின் அடிப்படைக் கொள்கை. இதற்காகத்தான் அவர் வாழ்நாள் முழுக்கப் பாடுபட்டார். சுய மரியாதை இயக்கத்தின் சார்பாக ஏராளமான ஆதி திராவிடர் சுய மரியாதை மாநாடுகளையும் ஆதிதிராவிடர் கிறிஸ்தவர் சுய மரியாதை மாநாடுகளையும் நடத்தினார். முதுகுளத் தூர் கலவரத்தின்போது, தாழ்த்தப்பட்ட மக்களின் பக்கம் நின்று, 'கலவரத்துக்குக் காரணமான பசும்பொன் முத்துராமலிங் கரைக் கைதுசெய்ய வேண்டும்’ என்று உறுதியாக வலியுறுத்தியதும் பெரியார் தான்.

மயிலாடுதுறை அருகே உள்ள காளி மற்றும் மாதிரிமங்கலம் ஆகிய ஊர்களில் 'சாதித் தொழிலைச் செய்ய மாட்டோம்’ என்று தாழ்த்தப்பட்ட மக்கள் நடத்திய பறை தப்பட்டையை எரிக்கும் போராட்டம், காங்கிரஸ் மாநாட்டில் தாழ்த்தப்பட்டவர் களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதை எதிர்த்து நடத்தப்பட்ட போராட்டம் என்று ஏராளமான போராட்டங்களைப் பெரியார் இயக்கம் நடத்தி உள்ளது. ஆனால், அவை எல்லாம் பெரிதாக ஆவணப்படுத்தப்படாததுதான் வரலாற்றுத் துயரம். 1926-ல் சிராவயல் என்ற ஊரில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு தனிக் கிணறு அமைக்கப்பட்டு, அதைத் திறப்பதற்காகப் பெரியார் அழைக்கப்பட்டார். ஆனால், 'பொதுக் கிணறுக்காகப் போராடுங்கள். தாகத்தால் செத்துப்போகலாமே தவிர, தனிக் கிணறு அமைப்பது தீர்வு அல்ல’ என்று பெரியார் மறுத்துவிட்டார். 'பறையன் பட்டம் போகாமல் சூத்திரன் பட்டம் போகாது’ என்று யார் தீண்டாமையை மேற்கொள்கிறார்களோ, அந்த பிற்படுத்தப்பட்டவர் களிடம் பெரியார் பேசினார். அதுதான் புரட்சி.''

''பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் மரண தண்டனையை ரத்துசெய்ய வேண்டும். ராஜபக்ஷேவைப் போர்க் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்று ஜெயலலிதா சட்டமன்றத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றிய பிறகு, ஈழ ஆதர வாளர்கள் சமச்சீர்க் கல்வி, பரமக்குடி துப்பாக்கிச்சூடு, நரேந்திர மோடி உண்ணாவிரதத்துக்கு ஆதரவு போன்ற விஷயங்களில் ஜெயலலிதாவைக் கடுமை யாக விமர்சிப்பது இல்லையே?''

''ஈழ ஆதரவாளர்களில் பலர் சாதி ஒழிப்பு, சிறுபான்மையினர் உரிமைகள், சுற்றுச்சூழல் பிரச்னை, மனித உரிமைகள் ஆகியவற்றில் கவனம் செலுத்தாத போக்கு இருக்கிறது. அதே நேரத்தில், காஷ்மீர், தண்டகாரண்யம், சல்வாஜூடும்பற்றிப் பேசும் பலர் ஈழப் பிரச்னைபற்றிக் கவலைப் படுவது இல்லை. இரண்டு தரப்பிலும் போதாமைகள் இருக்கின்றன. இவை சரி செய்யப்பட வேண்டும்.''

''பிரபாகரன் உயிரோடு இருக்கிறாரா? ஈழத் தமிழர்களின் பிரச்னைகளைத் தீர்க்க என்ன மாதிரியான தீர்வுகளை முன்வைக்கிறீர்கள்?''

''பிரபாகரன் உயிரோடு இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம். ஆனால், உயிரோடு இருக்கிறாரா என்பது தெரியாது. இன்றைய சூழலில், ராஜபக்ஷேயின் போர்க் குற்றங்கள் விசாரிக்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கை வலுவாக முன்வைக்கப்படு கிறது. ஆனால், ராஜபக்ஷே மட்டுமே இனப் படுகொலையில் ஈடுபடவில்லை. எல்லா இலங்கை அதிபர்களுமே தமிழர்களுக்கு எதிராக இனப் படுகொலையில் ஈடுபட்டவர்கள்தான். உயிரோடு உள்ள எல்லா இலங்கை அதிபர்களுமே போர்க் குற்றங்களின் அடிப்படையில் தண்டிக்கப்பட வேண்டியவர்கள்தான். ஈழப் பிரச்னைக்கான தீர்வு தமிழீழம்தான் என்று கருதுகிறோம். அந்த மக்களின் விருப்பமும் அதுதான் என்று உறுதியாக நம்புகிறோம்!''



Monday, September 26, 2011

மரணதண்டனை எதிர்ப்பு : ஜெயலலிதாவை வாழ்த்த வேண்டுமா, வலியுறுத்த வேண்டுமா?

இலங்கை அரசின் மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும், ராஜபக்ஷேவைப் போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும், பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் தூக்குத்தண்டனையை ரத்து செய்ய வேண்டும், கூடங்குளம் அணு உலைப் பணிகளைத் தற்காலிமாக நிறுத்தி வைக்க வேண்டும் என்று அடுக்கடுக்கான தீர்மானங்களைப் போட்டு அசத்துகிறார் ஜெயலலிதா. உண்மையிலேயே அவர் புரட்சித்தலைவிதானோ என்கிற மயக்கமும் பலருக்கு ஏற்படுவதைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், நன்றாகக் கவனித்துப்பார்த்தால், ஜெயலலிதாவால் நிறைவேற்றப்படும் அனைத்து தீர்மானங்களும் மத்திய அரசை வலியுறுத்துவதே தவிர, அவரது செயல்பாடுகளைக் கட்டுப்படுத்துபவையல்ல. பந்தை மத்திய அரசின் கோல்போஸ்ட்க்குத் தள்ளுவதே ஜெயா அரசின் தீர்மானங்கள். ஆனால், சமச்சீர்க்கல்வி குறித்த அணுகுமுறை, பரமக்குடியில் தலித்துகள் மீதான துப்பாக்கிச் சூடு, நரேந்திரமோடியின் உண்ணாவிரதத்துக்கு ஆதரவு தெரிவித்து பிரதிநிதிகளை அனுப்புவது, உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணிக்கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருந்தபோதே வேட்பாளர் பட்டியலை அறிவித்தது ஆகியவை மூலம் பார்ப்பன - இந்துத்துவ - எதேச்சதிகாரப் போக்கிலிருந்து தான் இன்னும் மாறவில்லை என்பதை ஜெயலலிதா நினைவூட்டிக் கொண்டே இருக்கிறார். ஆனால் மேற்கண்ட தீர்மானங்களிலேயே திருப்தி அடைந்து விடுபவர்கள் பரமக்குடி சம்பவம் போன்றவற்றில் அழுத்தமாகத் தனது எதிர்ப்பைத் தெரிவிக்க தயங்குவதைக் காணமுடிகிறது. இந்நிலையில் முவர் மரணதண்டனையை ரத்துசெய்யக் கோரும் ஜெயலலிதாவின் தீர்மானம் குறித்து இன்னொரு பார்வையை முன்வைக்கிறது எஸ்.வி.ஆரின் நூல்..

எஸ்.வி.ராஜதுரை எழுதி சென்னை அரசியல் பள்ளியின் வெளியீடாக வந்துள்ள ‘மரண தண்டனைக்கு எதிரான போராட்டம் : உரத்த சிந்தனைக்காக சில கருத்துகள்’ என்னும் நூல் மரணதண்டனை எதிர்ப்பாளர்களுக்கான இன்னொரு கருவி. எஸ்.வி.ஆர் மரணதண்டனை எதிர்ப்பு உள்ளிட்ட மனித உரிமை செயற்பாடுகளில் தொடர்ந்து பங்கெடுத்துக் கொள்பவர் என்பதால் அதுதொடர்பாகச் சட்டரீதியான பல தரவுகளை இந்தப் புத்தகத்தில் முன்வைக்கிறார். இந்நூலில் பல்வேறு விஷயங்கள் விளக்கப்பட்டாலும் முக்கியமானது மரணதண்டனையை ரத்து செய்வதில் மாநில அரசுக்கு உள்ள அதிகார வரம்பெல்லை குறித்தது. ‘பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்குத்தண்டனையை ரத்து செய்ய வேண்டும்’ என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய கையோடு ‘குடியரசுத்தலைவரால் ஒருவரின் கருணை மனு நிராகரிக்கப்பட்ட பிறகு மாநில அரசு அதில் தலையிட முடியாது’ என்றும் ஜெயலலிதா கூறினார். ஆனால், இந்த வாதம் தவறானது என்பதற்குப் பல வாதங்களையும் உதாரணங்களையும் அடுக்கடுக்காக முன்வைக்கிறார் எஸ்.வி.ஆர்.

‘மரணதண்டனை விதிக்கப்பட்ட ஒருவரின் கருணைமனு மீது முடிவெடுக்கும் அதிகாரத்தை அரசியல் சட்டப்பிரிவு 72 குடியரசுத்தலைவருக்கு வழங்குகிறது என்றால் அதே அதிகாரத்தைப் பிரிவு 161 மாநில ஆளுநருக்கு வழங்குகிறது. ஆனால் அதேநேரத்தில் இந்த அதிகாரங்கள் இணையான அதிகாரங்களே (Parellel power) தவிர படிநிலை அதிகாரங்கள்(Hierarchial power) அல்ல. அதாவது உச்சநீதிமன்றம் ஒரு தீர்ப்பை வழங்கியபிறகு அந்தத் தீர்ப்பில் மாநில உயர்நீதிமன்றங்கள் தலையிட முடியாது என்பது மாதிரியான அதிகாரம் அல்ல இது. எனவே குடியரசுத்தலைவர் ஒரு கருணைமனுவை நிராகரித்த பிறகும் கூட மாநில ஆளுநர் அந்தக் கருணைமனு மீது முடிவெடுக்கலாம். மேலும் குடியரசுத்தலைவரோ ஆளுநரோ இதுதொடர்பாக்ச் சுயேச்சையாக முடிவெடிக்க முடியாது, மத்திய, மாநில அமைச்சரவைகளின் வழிகாட்டுதலின்படியே எடுக்க முடியும்’ என்று அந்தப் புத்தகத்தில் வலியுறுத்தும் எஸ்.வி.ராஜதுரை அதற்கு உதாரணமாக இரண்டு உச்சநீதிமன்ற முடிவுகளையும் சுட்டிக் காட்டுகிறார். ((MataRam vs Union of India (1981) 1SCC 107; Kehar Singh vs Union of India (1989) 1 SCC 204)

‘குடியரசுத்தலைவரால் நிராகரிக்கப்பட்ட கருணைமனு மீது மாநில அரசு தலையிட முடியாது’ என்பதற்கான காரணமாக ஜெயலலிதா ஒரு கடிதத்தைச் சுட்டிக்காட்டினார். 1991, மார்ச் 5 அன்று மத்திய அரசு மாநில அரசுகளுக்கு அனுப்பிய கடிதமே அது. ஆனால் ‘இந்தக் கடிதம் என்பது நிர்வாகம் தொடர்பான ஆணையே அன்றி அரசியல் சட்டத்தைப் போல இறுதிப்படுத்தப்பட்ட அதிகாரம் அல்ல’ என்று வாதிடுகிறார் எஸ்.வி.ஆர். மேலும் இந்தக் கடிதம் எழுதப்பட்ட பின்னணியை அறிந்துகொண்டாலே மத்திய அரசின் இந்தக் கடிதம் எத்தகைய அதிகார வரம்புகளைக் கொண்டிருக்கிறது என்பதையும் புரிந்துகொள்ளலாம்.

1965ல் பஞ்சாப் மாநில முதல்வர் பிரதாப்சிங் கெய்ரோனைக் கொலை செய்ததாகத் தயாசிங் என்பவர் கைது செய்யப்பட்டவர். 1978ல் அவருக்கு மரணதண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டது. 1980ல் செய்த மேல்முறையீட்டில் உச்சநீதிமன்றமும் அந்தத் தீர்ப்பை உறுதி செய்தது. அவரது கருணைமனுக்களும் ஆளுநராலும் குடியரசுத்தலைவராலும் நிராகரிக்கப்பட்டன. ஆனால் இதற்கிடையில் பஞ்சாபில் இருந்து பிரிக்கப்பட்டு ஹரியானா மாநிலம் அமைக்கப்பட்டிருந்தது. 1988ல் தயாசிங் ஹரியானா ஆளுநருக்கு அனுப்பிய கருணைமனுவின் அடிப்படையில் தூக்குத்தண்டனையை நிறைவேற்ற இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் அலிப்பூர் சிறைக்கைதி ஒருவர் தயாசிங்கை விடுதலை செய்ய உத்தரவிட வேண்டி 1990ல் உச்சநீதிமன்றத்துக்குக் கடிதம் எழுதுகிறார். இதையே ரிட் மனுவாகக் கொண்டு உச்சநீதிமன்ற பெஞ்ச் தயாசிங் வழக்கை விசாரிக்கத் தொடங்கியது. அப்போதுதான் ஜெயலலிதா சுட்டிக்காட்டும் கடிதத்தை மத்திய அரசு உச்சநீதிமன்ற பெஞ்சு முன் சமர்ப்பித்தது. ‘குடியரசுத்தலைவரால் கருணைமனு நிராகரிக்கப்பட்ட பிறகு அதில் மாநில ஆளுநர் தலையிட முடியாது’ என்றும் தெரிவித்தது. ஆனால், உச்சநீதிமன்ற பெஞ்ச் அந்தக் கடிதத்தைப் பொருட்படுத்தவேயில்லை. 1991ல் தயாசிங்கின் மரணதண்டனை ரத்து செய்யப்பட்டு ஆயுள்தண்டனையாகக் குறைக்கப்பட்டது.

ஜெயலலிதா ‘மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை’ என்பதற்கான ஆதாரமாகச் சுட்டிக்காட்டும் கடிதத்தின் பின்னணியில் உள்ள வழக்கிலேயே மரணதண்டனை ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் 2000ல் கருணாநிதி ஆட்சியின்போது பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் கருணை மனுக்கள் ஆளுநரால் நிராகரிக்கப்பட்டதையே காரணமாகக் காட்டி மீண்டும் மீண்டும் ஜெயலலிதா பல்லவி பாடுவதும் சரியானது அல்ல. ஏனெனில் ‘குடியரசுத்தலைவராலும் ஆளுநராலும் கருணைமனுக்கள் நிராகரிக்கப்பட்டாலும் மாறிய சூழ்நிலைமைகள் அடிப்படையில் மீண்டும் குடியரசுத்தலைவருக்கும் மாநில ஆளுநருக்கும் கருணைமனுக்கள் அனுப்பலாம்’ என்பதற்கும் தயாசிங்கின் வழக்கே உதாரணம். ஒருவேளை மூவரும் தங்கள் மரணதண்டனையைக் குறைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளாவிட்டாலும் அரசியல் சட்டப்பிரிவு 54ன்படி மாநில அரசு தண்டனையைக் குறைக்க சுயேச்சையாக முடிவெடுக்கலாம். புலவர் கலியபெருமாள் கருணைமனு அனுப்பாதபோதும் தமிழக அரசு முன்வந்து அவரது மரணதண்டனையை ஆயுள்தண்டனையாக மாற்றியதே இதற்குச் சிறந்த முன்னுதாரணம்.

‘மாநில அரசாங்கமும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு என்பதால் அது மக்களின் இறையாண்மையைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. எனவே மாநில அமைச்சரவை முடிவின்படி மரணதண்டனையை ரத்து செய்ய மாநில ஆளுநருக்கு உள்ள அதிகாரமும் இறையாண்மை அதிகாரம்தான்’ என்று உச்சநீதிமன்றத் தீர்ப்பு ((2003(7)SCC 121) கூறுகிறது. மத்திய அரசு கொண்டுவரவுள்ள ‘வகுப்புவாதத் தடுப்பு மசோதா’ மாநில அரசுகளின் அதிகாரங்களைப் பறிப்பதாக மற்ற மாநில முதல்வர்களுக்கு கடிதம் எழுதும் ஜெயலலிதா, மரணதண்டனையைக் குறைப்பதிலும் மாநில அரசின் உரிமையை வலியுறுத்த வேண்டும். மாறாக, மத்திய அரசு எழுதியுள்ள ஒரு கடிதத்தையே அடிப்படையாக வைத்து தன் பொறுப்பையும் அதிகாரத்தையும் உரிமையையும் தட்டிக்கழிப்பது சரியல்ல என்று அழுத்தமாகவும் ஆணித்தரமாகவும் சுட்டிக்காட்டுகிறார் எஸ்.வி.ஆர்.

எனவே உடனடியாக ஜெயலலிதா பேரறிவாளன், சாந்தன், முருகன் மூவருக்கும் தானாகவே மரணதண்டனையை ரத்துசெய்யும் தீர்மானத்தை அமைச்சரவையில் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்ப வேண்டும் என்பதுதான் இன்று நாம் வலியுறுத்த வேண்டிய கோரிக்கை.

Friday, September 23, 2011

இவர்கள் இயற்கையின் மக்கள்!

ரீ.சிவக்குமார், படம் : கே.கார்த்திகேயன்

ந்தியா முழுவதும் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் பழங்குடிகள் குறித்து ஆய்வு செய்பவர்கள் ரெங்கையா முருகனும் ஹரிசரவணனும். இவர்கள் இருவரும் நாட்டுப்புற ஆய்வு மாணவர்களோ, மானுடவியல் துறைப் பேராசியர்களோ அல்ல. ரெங்கையா முருகன், சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தில் (M.I.D.S) நூலகர். ஹரிசரவணன், ஆங்கில இலக்கியப் படிப்பைப் பாதியில் நிறுத்தியவர். பழங்குடிகள் குறித்து இவர்கள் எழுதியுள்ள 'அனுபவங்களின் நிழல்பாதை’ நூல் தொ.பரமசிவன், பக்தவச்சல பாரதி போன்ற ஆய்வாளர்களிடம் பெரும் வர வேற்பைப் பெற்றது.

''காட்டுப் பன்றி ஒன்று கிழங்கை அகழ்ந்து தின்ற பிறகு, மிச்சம் இருக்கும் கிழங்கைப் பழங் குடிகள் தின்பதாகப் பழந்தமிழ் இலக்கியத்தில் பதிவுகள் உள்ளன. அந்த வழக்கம் இன்றும்பழங்குடி களிடம் உள்ளது. நமது ஆதி வாழ்க்கையைத் தேடி அலையும் வேட்கைதான் எங்களைக் காடுகளை நோக்கிச் செலுத்தியது. ஆதிவாசிகள் என்றாலே நிர்வாணமாகத் திரிபவர்கள், நர மாமிசம் உண்பவர் கள், வரைமுறையற்ற பாலுறவுகொள்பவர்கள் என்ற தப்பான கற்பிதங்கள் நம்மிடம் உள்ளன. ஆனால், உண்மையில் நாகரிகச் சமுதாயம் என்று சொல்லிக்கொள்கிற நம்மைவிட, மேம்பட்ட கலா சாரம் கொண்டவர்கள் ஆதிவாசிகள். தேவைக்கு மேல் எதையும் பயன்படுத்தாத வாழ்க்கை, அடுத்த வர் உடைமைகளை ஆக்கிரமிக்காத பேராண்மை, எல்லா வளங்களையும் பகிர்ந்து வாழ்வதுஆகியவை இந்தியா முழுக்கப் பரவிக்கிடக்கும் ஆதிவாசிகளின் பொதுக் குணங்கள்!'' என்று சொல்லும் ஹரிசரவண னின் வார்த்தைகளில் அடர்ந்து செறிந்த காட்டின் வனப்பையும் அருவியின் குளிர்ச்சியையும் உணர முடிகிறது.

''இயற்கை சார்ந்த வாழ்க்கை அவர்களுடையது. ஆனால், நாகரிகம், அறிவியல், வளர்ச்சி என்ற பெயரால் நம்மால் திணிக்கப்பட்டவை அவர்களின் வாழ்க்கையையும் இயற்கையின் ஆன்மாவையும் குலைத்து இருக்கின்றன. உதாரணத்துக்கு, மத்திய இந்தியாவில் வாழக்கூடிய பழங்குடிகள், ஊட்டியில் வசிக்கும் படுகர்கள், இருளர்கள் ஆகியோரிடம் ரத்த சோகை அதிகமாகக் காணப்படுகிறது.காரணம், அவர்களது மண்ணுக்கு ஏற்ற தானியங்களை விளைவிப்பதற்குப் பதிலாக, பிரிட்டிஷ்காரர்களால் திணிக்கப்பட்ட உருளைக் கிழங்கு, முட்டைக்கோஸ், பீட்ரூட், கேரட், காலிஃப்ளவர் போன்ற காய்களை அவர்கள் விளைவித்துக்கொண்டு இருக்கிறார்கள்!'' என்ற ரெங்கையா முருகனின் வார்த்தைகளில் அவ்வளவு வருத்தம்.

'' 'போட்டிகள் நிறைந்த உலகமயச் சூழல்’ என்ற பெயரில் யாரும் யாரையும் ஏமாற்றலாம், யாரும் எந்தப் பகுதியையும் ஆக்கிரமிக்கலாம் என்கிற தப்பான உணர்வு நம்மிடையே விதைக்கப்பட்டு உள்ளது. ஆனால், இதற்கு முற்றிலும் நேர்மாறானது ஆதிவாசிகளின் வாழ்க்கை. ஒடிஷா மாநிலத்தில் வசிக்கும் பூஞ்சியா பழங் குடி மக்கள், தங்கள் வாழ்க்கையைத் தங்கள் எல்லைக்குள்ளேயே அமைத்துக்கொள்கின்ற னர். இத்தனைக்கும் வரையறுக்கப்பட்ட எல்லைக் கோடுகள் என எதுவும் கிடையாது. எல்லாமே மனக் கணக்குதான். ஒரு பூஞ்சியா ஆதிவாசி தங்களது எல்லைப் பகுதியைத் தாண்டி வேறு ஒரு பகுதியில் ஒரு சுள்ளி பொறுக்கி வந்தால்கூட, அந்த பூஞ்சியா இனமே ஒன்று சேர்ந்து அவரின் வீட்டை எரித்துவிடுவார் கள். ஒருவர் வீடு கட்ட வேண்டும் என்றால், எல்லோரும் அவருக்கு உதவுவார்கள். விளைச் சல் அவர்களுக்குத் தனித்தனியாக இருந்தா லும் கூட்டு அறுவடைதான். 20 மூட்டை நெல் விளைவித்தவருக்கும் இரண்டு மூட்டை நெல் விளைவித்தவருக்கும் சமமாகத்தான் விளைச்சல் பகிர்ந்து அளிக்கப்படும். குஜராத் தின் டாங்கு பகுதியில் வசித்து வரும் குக்ணா பழங்குடிகளிடம் ஒரு தனியான ராமாயணம் நிலவி வருகிறது. அந்த ராமாயணத்தில் அயோத்தி, இலங்கை எல்லாமே அவர்கள் வசிக்கும் நிலப்பரப்பில் தான் அமைந்து இருக்கிறது. அந்தக் கதையில் சீதை சுள்ளி பொறுக்குபவள், விருந்தினர்களுக்குத் தேநீர் தயாரித்து உபசரிப்பவள். ராஜராஜ சோழன் காலம் தொடங்கி இன்றைய முதல்வர் வரை நமக்கு எழுதப்பட்ட வரலாறுகள் உண்டு. ஆனால், ஆதிவாசிகளுக்கோ ஆயிரக் கணக்கான ஆண்டு வரலாறும் வாய்மொழி வரலாறே. அவற்றைக் கதைப் பாடல்களாகப் பாடி பல தலைமுறைகளாகக் கடத்திச் சேகரித்து வருகின்றனர். வாய்மொழி வரலாறு, அழகான கை வினைகள், காடுகளின் ஒவ்வோர் அங்குலத்தையும் அறிந்து வைத்து இருக்கிற அறிவுநுட்பம், விலங்கு களையும் பறவைகளையும் பாது காத்து இயற்கையின் சமநிலை குலையாமல் வாழ்கிற வாழ்க்கை என்று ஒவ்வோர் அம்சத்திலும் அவர்கள் நம்மை விஞ்சியே இருக் கிறார்கள்!'' என்று ஆச்சர்யத் தகவல் சொல்கிறார் ஹரி.

''ஆதிவாசிகள் நிர்வாணமாக இருப்பார்கள் என்பதும் தவறான புரிதலே! அந்தமானில் வசிக்கும் சென்டினல் பழங்குடிகள் மட்டுமே நிர்வாணமாக இருப்பார்கள். மத்திய இந்தியாவில் வசிக்கும் பழங்குடிப் பெண்கள் தங்கள் மார்புகளை வெறும் ஆபரணங்களால் மறைப்பதை அங்கு யாரும் வக்கிரமாகப் பார்ப்பது இல்லை. அங்கு பெண்களுக்குத் தங்கள் துணையைத் தேர்ந்தெடுத்துக்கொள்வதற்கும் மண விலக்கு செய்வதற்கும் முழு உரிமை உண்டு.முக்கிய மாகப் பழங்குடிகளிடத்தில் குடும்ப வன்முறை இல்லை. அவர்கள் தாங்கள் வளர்க்கும் நாயைக்கூட அடிப்பது இல்லை. விபசாரமும் இல்லை, பாலியல் பலாத்காரமும் இல்லை. அவ்வளவு ஏன், ஒரே ஒரு பிச்சைக்காரர்கூடப் பழங்குடிகளிடத்தில் இல்லை. மன நோயாளிகளை அவர்கள் தெய்வமாகக் கருதி, வீட்டுக்கு அழைத்து உணவும் மதுவும் கொடுத்து உபசரிக்கிறார்கள். ஆனால், நாமோ மெள்ள மெள்ள அவர்கள் பராமரிக்கும் காட்டு வளத்தைச் சுரண்டி, அவர்களின் வேர்களைப் பிடுங்கி வேறு ஒரு இடத்தில் நட முயற்சிக்கிறோம். பழங்குடிகளைக் கையாள்வதில் பிரிட்டிஷ்காரர்களுக்கும் இன்றைய ஆட்சியாளர்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. குஜராத்தில் வசிக்கும் ரத்வா என்னும் பழங்குடிகள், பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் குற்றப் பரம்பரையின ராக அறிவிக்கப்பட்டனர். இன்றும் அங்கு ஏதாவது திருட்டு என்றால், முதலில் போலீஸ் பிடித்துச்செல்வது அவர்களையே. ரத்வாக்களின் சுவரோவியங்களில் போலீஸ் ஜீப் இடம் பெறும் அளவுக்கு மோசமான வன்முறையை நாம் நிகழ்த்தியிருக்கிறோம்!'' என்று ஆவேசமாகிறார் ரெங்கையா முருகன்.

''பிரிட்டிஷ்காரர்களுக்கு எதிராக சிப்பாய் புரட்சிக்கு முன்பு போராடியவர்கள் பழங்குடிகளே. கேரளாவில் பழசிராஜாவுக்கு உதவிய வயநாடு பழங்குடிகளான குரிசேரியான், முண்டாக்கள், குந்தா த்ர்வாபோல ஏராளமான பழங்குடி மக்களின் விடுதலைப் போராட்டங்கள் ஆவணப்படுத்தப்படவே இல்லை.

உலகமயமாக்கல், வளர்ச்சி, தாராளமயமாக்கல் என்ற பெயர்களில் கொஞ்சம் கொஞ்சமாக அவர்கள் வாழ்க்கையில் இருந்தே அவர்களை விரட்டிக் கொண்டு இருக்கிறோம். இன்று சென்னையில் வசிக்கும் வட இந்திய இளைஞர்களில் கணிச மானவர்கள் சட்டீஸ்கர், ஜார்க்கண்ட், மணிப் பூரைச் சேர்ந்த பழங்குடிகள். டெல்லியிலும் மும்பை யிலும் இருப்பதைவிட, அவர்கள் சென்னையில் பாதுகாப்பாக உணர்கிறார்கள். ஆனால், விரிந்து பரந்த மலையைத் தங்கள் வீடாக நினைக்கும் அந்தப் பழங்குடி இளைஞன் இப்போது வசிப்பதோ வெந்து கருகும் ஆஸ்பெஸ்டாஸ் கூரையின் கீழேதான். பிரம்ம புத்ரா நதியிலும் மலையின் தாடியென வளர்ந்து நீண்ட அருவியிலும் நீந்திக் குளித்துக் களித்த மலைமகனுக்கு இன்று குளிக்கக் கிடைப்பதோ முக்கால் பக்கெட் தண்ணீர்!'' - முடிக்கும்போது வேட்டையாடப்பட்ட ஒரு மிருகத்தின் வலியைப் போல இருவரின் வார்த்தைகளிலும் சோகம் சூழ்ந்து நிற்கிறது!

Saturday, May 29, 2010

லும்பினியில் புதிய கட்டுரைகள்

தமிழீழப் போராட்டமும் தமிழகமும் - அடுத்து...? - அ.மார்க்ஸ்

நாடு கடந்த தமிழீழ அரசு - ஷோபாசக்தி

இந்த தொழிலதிபருங்க தொல்லை தாங்க முடியலேப்பா! - அசாதி

ஒரு பெட்டைநாயின் கூச்சல் - லீனாமணிமேகலை

அந்தரத்தில் ’தமிழின உணர்வு’ உருவாகுமா? - புதியபோராளி பாஸ்கர்.

மேலும்...

Monday, May 17, 2010

பானுபாரதியின் (நார்வே) “பிறத்தியாள்” கவிதைத்தொகுப்பு விமர்சனம் - கலந்துரையாடல்


நாள் : 20, மே 2010, வியாழன் மாலை 6 மணி

இடம்: தேவநேயப்பாவாணர் அரங்கு ( LLA)
அண்ணா சாலை, சென்னை - 2.

பங்கேற்போர் :

வ.கீதா
அ.வெண்ணிலா
பிரபஞ்சன்
மதிவண்ணன்
சுகுணா திவாகர்
யாழினி முனுசாமி
கவின் மலர்
அமுதா

அன்புடன் அழைக்கும்
கருப்புப் பிரதிகள்

தொடர்புக்கு : 9444272500


Saturday, May 15, 2010

வினவு- முகிலன் - சந்தனமுல்லை வாதங்களைத் தொடர்ந்து... தடை-தணிக்கை-தண்டனை...

சந்தனமுல்லையின் ‘முஸ்லிம் பெண்கள் சம்பாதிப்பது ஹராமா?’ என்கிற பதிவிற்காக எழுதப்பட்ட பின்னூட்டம். சற்றே நீண்டுவிட்டதால் அதை இங்கே பதிவாக இடுகிறேன்.


நன்றி முகிலனுக்கு.

அனேகமாக சுமஜ்லாவின் பர்தா பதிவு குறித்த சர்ச்சையில் நான் மற்றும் வினவு ஆகியோரின் பார்வைகள் மற்ற பதிவர்களிடமிருந்து மாறுபட்டதாக இருந்தமையால் இத்தகையதொரு பரிந்துரைப்பு எழுந்திருக்கும் என்று கருதுகிறேன். ஆனால் எனதோ வினவின் நோக்கமோ முஸ்லீம் சமூகத்தில் உள்ள பெண்ணடிமையை ஆதரிப்பதில்லை, மாறாக அதை விமர்சிக்கிறேன் என்ற பெயரில் வெளிப்பட்ட இந்துமனோபாவப் பார்வைகளை விமர்சிப்பதும் கூடுதலாக மதங்களைக் கடந்த ஒரு ஆணாதிக்க எதிர்ப்பை வலியுறுத்துவதும்தான். முஸ்லீம் சமூகத்தில் மட்டும்தான் ஆணாதிக்கம் இருப்பதைப் போன்ற பிரமை, பெரும்பாலான ’இந்துக்களுக்கு’ இருக்கிறது. அதற்கு பர்தா என்கிற வடிவம் காரணமாக இருக்கிறது. ஆனால் இந்துமதம் என்பதும் ஆணாதிக்கத்தில் இஸ்லாத்துக்குச் சளைத்ததில்லை என்பதை நிறுவுவதற்காகத்தான் அவ்வளவு பாடு. இங்கேயும் கூட சந்தனமுல்லை எழுதியிருக்கும் பிரச்சினையை எடுத்துக்கொண்டால், பத்வா விதித்திருக்கும் தியோபந்த் முஸ்லீம் அமைப்பு, ‘டூ லேட்’தான். ஏனென்றால் இதையெல்லாம் நமது லோககுரு முன்பே சொல்லிவிட்டார். ஜெயேந்திரனோ அல்லது இந்த முஸ்லீம் அமைப்போ அடிப்படையில் ஆண்கள் அமைப்பு என்ற புரிதல் அவசியம் தேவை. சமயங்களில் அங்கு ஆண்கள் இல்லாவிட்டாலும் ஆணாதிக்கக் கருத்தியலை உள்வாங்கிக் கொண்ட பெண்களே இத்தகைய அதிகாரத்தைச் செலுத்துவதற்குப் போதுமானவர்களாக இருப்பார்கள். குறிப்பாக இந்துத்துவ அமைப்புகளின் மகளிர் அமைப்புகளைச் சொல்லலாம்.

எனவே வினவு மற்றும் எனது விழைவு, இது முஸ்லீம் விரோத வாதங்களாக, இந்துத்துவச் சார்பு விவாதங்களாகப் போய்விடக்கூடாது என்பதே தவிர, முஸ்லீம் ஆணாதிக்கத்தைக் காப்பாற்றுவது இல்லை. பெண்கள் வேலைக்குப் போவது என்பதை மத அடிப்படைவாதிகள், குறிப்பாக ஆண்கள் எதிர்ப்பதன் காரணம் மிக வெளிப்படையானது. முதலாவதாக, ஒரு பெண் வீட்டை விட்டு வெளியே வருவது என்பதே ஆணுக்கு சகிக்க முடியாததாக இருக்கிறது. ‘அவள் தன் கண்காணிப்பு எல்லைக்கு வெளியே போய் விட்டாள்’ என்று கருதத் தொடங்குகிறார்கள். ‘வேலைக்குப் போவது’ என்பது வீட்டை விட்டு வெளியே வருவதன் ஒரு வடிவம் மட்டுமே. பெண்கள் பொதுவாழ்க்கைக்கு வருவது, குறிப்பாக அரசியலில் பங்கெடுத்துக் கொள்வது என்கிற வடிவத்தை ஆண்கள் முடிந்தவரை தீவிரமாக எதிர்க்கிறார்கள் அல்லது அப்படி வருகிற பெண்ணின் ஒழுக்கம் குறித்து சந்தேகம் கொள்கிறார்கள். ஆக, இங்கே காஞ்சி ஜெயேந்திரன், முஸ்லீம் அமைப்பு மட்டுமில்லாது பொதுவாக அனைத்து சராசரி ஆண்களுக்குமே ஒரே மாதிரியான கருத்தோட்டம்தான். ‘வேலைக்குப் போகும் பெண்கள் ஒழுக்கம் கெட்டவர்கள்’ - ‘பெண்கள் வேலைக்குப் போவது ஹராம்’ - ‘பொதுவெளிக்கு வருகிற பெண் ஒழுக்கங்கெட்டவள்’ - ஒத்திசைகிற இந்த குரலிசைகளின் விகிதம் கூடக் குறைய இருந்து சுருதி பிசகலாமே தவிர பொதுவாக ஆண்மனம் என்பது வீட்டை விட்டு வெளியே வருகிற பெண்ணைச் சந்தேகிக்கவே செய்கிறது. இதன் அடிப்படையை யோசித்துப் பார்த்தால் வேடிக்கையாக இருக்கும். அவன் பெண்ணை மட்டும் சந்தேகிக்கவில்லை, வீட்டிற்கு அப்பால் அவள் சந்திக்க நேர்கிற தன்னைப் போன்ற ஒரு ஆணின் மீதும் அவனுக்கு நம்பிக்கையில்லை. தான் ஒரு ஆணாயிருப்பதாலேயே, அவன் பெண்ணை நம்ப மறுக்கிறான். இரண்டாவதாக வேலைக்குப் போவதன் மூலம் பெண்ணுக்குக் கிடைக்கும் பொருளாதார ரீதியான தற்சார்பும், இன்னொரு உலகத்தை அறிந்து கொள்கிற வாய்ப்புகளும், தேர்ந்து கொள்கிற சாத்தியங்களும் ஆணுக்குப் பெண்ணின் மீது அச்சத்தை ஏற்படுத்திக் கண்காணிப்பை இறுக்கச் செய்கிறது.

ஆனால் இந்த விவாதத்தில் பின்னூட்டமிட்டிருக்கிற முஸ்லீம் ஆணாகிய ஷர்புதீனின் கருத்து எனக்கு முக்கியமானதாகப் படுகிறது. ஒருகாலத்தில் அட்டைப்படத்திலிருக்கிற நடிகை சீதாவின் புகைப்படத்தை உற்றுப் பார்ப்பதே கண்டிப்புக்கு உரியதாக இருந்தது. ஆனால் இன்று வீட்டோடு ‘மானாட மயிலாட’
பார்க்கிறோம். ஒரு காலத்தில் தமிழ்த்திரையில் கன்னத்தில் முத்தமிடுகிற காட்சி வரும்போது கூட தங்கள் குழந்தைகளைத் திரையரங்கு இருக்கைக்குக் கீழே தலையை அழுத்துகிற பெற்றோர்கள் இருந்தார்கள். இப்போது உதட்டோடு உதடு பொருத்துகிற முத்தக்காட்சிகள் தமிழ்ச்சினிமாக்களில் சாதாரணம். இதை முஸ்லீம்களும் குடும்பத்தோடு பார்க்கத்தான் செய்கிறார்கள். ஆக கலாச்சாரம்-தணிக்கை-கண்டிப்பு மாதிரியான விஷயங்களுக்கு மாறாக சமூகச்சூழல் மாறிக்கொண்டிருக்கிறது. அந்த மாற்றத்தை மத அடிப்படைவாதிகளாலோ கலாச்சார அடிப்படைவாதிகளாலோ தடுத்துவிட முடியாது என்பதோடு அந்த சமூகச்சூழல் மாற்றங்கள் அவர்களுக்கும் சில நன்மைகளை விளைவிக்கத்தான் செய்கின்றன. ஆக, சமூகச்சூழல் மாறும்போது தணிக்கை மற்றும் தண்டனைகளை மாற்றிக்கொள்கிறார்கள். இன்னும் கொஞ்சம் சுதந்திரத்தின் எல்லைகளை நீட்டிக்கிறார்கள். ஆனால், பிடியைப் பத்திரமாக இறுக்கிக்கொள்கிறார்கள். இது ஒன்றும் புரிவதற்கு அவ்வளவு கஷ்டமானது அல்ல. சபரிமலைக்கு மாலை போடுவதற்கு மதுவையும் புகையையும் தவிர்ப்பது என்பது ஒரு காலத்தில் அத்தியாவசியமாய் இருந்தது. ஆனால் மதுவை விலக்குவதைப் போல புகையை விலக்குவது அவ்வளவு எளிதானதில்லை என்பதால், ‘சிகரெட் மட்டும் பிடித்துக்கொள்ளலாம்’ என்று ‘விதி’ தளர்த்தப்பட்டது. (சில இடங்களில் தனிக்குவளையில் மதுவும் அருந்தலாம் என்கிற ‘சிறப்பு மது தரிசனச் சலுகையும்’ உண்டு.) எப்படியிருந்தபோதும் கண்காணிப்பு-சுதந்திரம், தணிக்கை-மீறல், தண்டனை-எதிர்ப்பு என்கிற எதிர்வுகள் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன. சுதந்திர விருப்பம், மீறல் மற்றும் எதிர்ப்பின் வெளி அதிகமாகிக் கொண்டே போகும்போது கண்காணிப்பு-தண்டனை-தணிக்கையை வலியுறுத்துகிற அடிப்படைவாதிகள் சட்டகங்களையும் வலைகளையும் தூக்கிக்கொண்டு பின்னால் ஓடிக்கொண்டிருக்கிறார்கள்.

இன்னொன்று அடிப்படையில் முஸ்லீம் சமூகம் குறித்து பொதுவெளியில் நடக்கிற பெரும்பாலான விவாதங்கள் முஸ்லீம் சமூகங்கள் குறித்த புரிதல்கள் இல்லாமல் அல்லது அரைகுறைப் புரிதல்களுடன் தான் நடைபெறுகின்றன. பர்தா, பத்வா, தாலிபான்கள் என்கிற தாங்கள் அறிந்த சில விஷயங்களைக் கொண்டு ஒட்டுமொத்தமாக ‘முஸ்லீம் பெண்ணடிமைத்தனம்’ குறித்து ஒரு முடிவுக்கு வந்துவிடுகிற பெரும்பாலானோரைத்தான் காண முடிகிறது. சந்தனமுல்லை பதிவில் நாஸியா என்னும் முஸ்லீம் பெண் சொல்வதைப் போல இந்த ‘பத்வா’க்களைப் பெரும்பாலான முஸ்லீம்கள் சீரியசாக எடுத்துக்கொள்வதில்லை. திண்டுக்கல்லில் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக்கழகத்தோடு இணைந்து பல கூட்டங்களை நடத்தியபோது, அந்த அமைப்பின் நகரச்செயலாளராக இருந்த முஸ்லீம் இளைஞர் ஒரு தகவலைச் சொன்னார், ‘இஸ்லாத்தில் இசை என்பதே ஹராம்’ என்றார். உண்மையில் இது எனக்கு விளங்கவில்லை. அப்படியானால் நாகூர் அனிபா, ஏ.ஆர்.ரகுமான் தொடங்கி இறுதிக்காலத்தில் இஸ்லாத்தைத் தழுவிய மைக்கேல் ஜாக்சன் வரை என்ன செய்யலாம்? எனக்குப் பாங்கோசையே அற்புதமான இசையாக இருக்கும். சமயங்களில் அரபுச்சேனல்களில் அரபுமொழி கேட்டுக்கொண்டிருப்பேன். அது செய்தியா, தொழுகையா, என்ன நிகழ்ச்சி என்று தெரியாவிட்டாலும் அரபுமொழி உச்சரிக்கப்படும் விதமே ஒரு இசையாய் இருக்கும். அப்படியானால் இசையை ‘ஹராம்’ என்று சொன்ன அந்த முஸ்லீம் நண்பரின் கருத்தை என்ன சொல்வது?

இதுமாதிரியான விஷயங்களுக்கு முதலில் இஸ்லாமியக் கலாச்சாரத்தை நாம் புரிந்துகொள்ள முயல வேண்டும். அவர்களுடன் ஊடாடி உரையாடத் தயாராக இருக்க வேண்டும். ஆனால் முஸ்லீம் சமூகம் ஒரு மூடுண்ட, இறுக்கமான சமூகம் என்கிற கருத்து நம் அனைவருக்குமே இருக்கிறது. (இதில் முற்போக்காளர்களும் அடக்கம்). இது நம்மைப் பல தவறான புரிதல்களுக்கு இட்டுச் செல்கிறது என்று கருதுகிறேன்.

எப்படி இருந்தபோதிலும் நான் இதுவரை சந்தனமுல்லையின் பதிவுகளைப் படித்ததில்லை. ஆனால் நண்பர் பா.ராஜாராம், ‘சந்தனமுல்லை பதிவில் என்னைக் குறித்தும் ஒரு குறிப்பு பின்னூட்டம் இருப்பதாகத்’ தெரிவித்ததை ஒட்டி படிக்க நேர்ந்தது. நல்ல குறிப்பிடத்தக்க நடை. இறுதியாக இந்த விஷயத்தையும் நண்பர்கள் முடிந்தால் யோசிக்க வேண்டுகிறேன். முஸ்லீம் சமூகம் இறுக்கமான பிற்போக்குச் சமூகம், முஸ்லீம் பெண்கள் அடக்கி ஒடுக்கி வைக்கப்பட்டவர்கள் என்கிற பொதுக்கருத்து நம் எல்லோரிடமும் இருக்கிறது. அது முற்றுமுழுக்க பொய் அல்லது தவறான கருத்து என்றும் சொல்லி விட முடியாது. ஆனால் ஷகீலா, மும்தாஜ், குஷ்பு என்று தமிழ்ச்சினிமாவின் கவர்ச்சிப்பிம்பங்களாக இட்டு நிரப்பப்பட்டவர்கள் அனைவரும் முஸ்லீம் பெண்களே.

தோழமையுடன்

சுகுணாதிவாகர்.